CINEMA
“தாயை இழந்து நின்ற அஜித்துக்கு பார்த்திபன் கொடுத்த ‘கண்ணீர் பூக்கள்’…”பெரிய மாலைகள் ஒதுக்கப்பட்டது…அம்மாவின் காலடியிலேயே இருந்த மல்லிப்பூ சரத்தின் பின்னணி…!”
நடிகரும் சர்வதேச கார் பந்தய வீரருமான அஜித் குமாரின் தாயார் மோகினி மணி அம்மாள், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மே 30ஆம் தேதி சனிக்கிழமை காலமானார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலரும் நேரில் வந்து மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கின் போது, தாயாரின் உடலை அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் கண்ணீருடன் தோளில் சுமந்து சென்று தகனம் செய்த காட்சி பார்ப்பவர்களை கலங்க வைத்தது.
இந்த இறுதி அஞ்சலி நிகழ்வின் போது, திரையுலகினர் பலரும் பிரம்மாண்ட மலர் வளையங்களுடன் வந்திருந்த வேளையில், வித்தியாசமான சிந்தனை கொண்ட இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மட்டும் கையில் ஒரு சிறிய மல்லிப்பூ சரத்துடன் அஞ்சலி செலுத்த வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பார்த்திபனின் கையில் இருந்த அந்த மல்லிப்பூ சரம் அம்புக்குறியிட்டு காட்டப்பட்டு, பெரும் விவாதப் பொருளாக மாறியது. இறுதிச்சடங்கு போன்ற ஒரு சோகமான சூழலில் பார்த்திபன் ஏன் இவ்வளவு சிறிய மல்லிப்பூவை எடுத்துச் சென்றார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்தது.
தற்போது இந்த விவகாரம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் பார்த்திபன். அதில், “அம்பு குறியிட்டு காட்டுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. பெரிய மாலைகள் ‘பெரியது’ என்ற காரணத்தினாலேயே (இடநெருக்கடியால்) உடனே அங்கிருந்து ஒதுக்கப்பட்டுவிடும். ஆனால், நான் கொண்டு சென்றது ‘சிறிய’ மல்லிப்பூ சரம் என்பதால், அந்த அம்மாவின் காலாடியிலேயே நீண்ட நேரம் தங்கியிருந்தன இக்கண்ணீர் பூக்கள்” எனப் பதிவிட்டுள்ளார். பார்த்திபனின் இந்த ஆழமான மற்றும் எதார்த்தமான விளக்கத்தைக் கண்ட நெட்டிசன்கள், “கடினமான நேரத்தில் சக கலைஞனுக்காக நேரில் வந்த உங்களின் அன்பும், இந்த உயர்ந்த மாண்பும் போதும்” எனப் பாராட்டி கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
