LATEST NEWS
டி.ராஜேந்திரன் போல ரைமிங் பேசும் சிஎம் விஜய்…விஜய் பேசிய ‘அந்த ஒரு வார்த்தை’.. மேடையில் பொங்கி எழுந்த உதயநிதி…வாயில் இருந்து நல்ல திட்டம் வருமா?…முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி விட்ட அதிரடி சவால்…!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் வீழ்த்தி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் மீதான ஆதரவும் எதிர்ப்பும் அரசியல் களத்தில் தீவிரமடைந்துள்ளன. சமீபத்தில் திருச்சிக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், முந்தைய திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததோடு, “வாயில் இருந்து நல்லா வருது.. வேண்டாம்” என்று ஆவேசமாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்த பேச்சுக்குத் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை பெரம்பூரில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், விஜய்யின் நிர்வாகத் திறமையையும் அரசியல் முதிர்ச்சியையும் கடுமையாகச் சாடினார்.
முதலமைச்சர் விஜய்யின் திருச்சி பயணத்தை வெறும் தேர்தல் பிரச்சாரப் பயணம் என்று விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞரோ அல்லது முதியவர் ஸ்டாலினோ எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் புதிய திட்டங்களை அறிவிப்பார்கள், ஆனால் தற்போதைய முதலமைச்சர் திருச்சியில் எந்தவொரு மக்கள் நலத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். மேலும், “கவர்ச்சி அரசியல் மூலமாகத் தான் மக்கள் என்னை தேர்வு செய்துள்ளார்களா?” என்று விஜய் கோபப்படுவதைக் குறிப்பிட்ட உதயநிதி, கவர்ச்சியைத் தாண்டி அவர் வெற்றி பெற்றதற்கான இரண்டு காரணங்களைச் சொல்ல முடியுமா என்று சவால் விடுத்தார். மாநில உரிமைகளுக்காகவோ அல்லது பாஜகவிற்கு எதிராகவோ விஜய் எப்போதாவது போராடியிருக்கிறாரா, கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளிலேயே முதலமைச்சரான அவருக்குத் தனது வேட்பாளர்களின் பெயர்களாவது முழுமையாகத் தெரியுமா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
விஜய்யின் “வாயில் இருந்து நல்லா வந்துவிடும்” என்ற பேச்சுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்த உதயநிதி, முதலமைச்சரின் வாயில் இருந்து மக்கள் நலனுக்கான நல்ல திட்டங்கள் ஏதேனும் வருமா என்றுதான் தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, இதுவரை உருப்படியாக எதுவும் வரவில்லை என்று சாடினார். எதற்கெடுத்தாலும் ‘திமுக சதி’ என்று பழிபோடும் விஜய், தூர சக்தி, கோர சக்தி என டி.ராஜேந்திரன் பாணியில் ரைமிங்காகப் பேசுவதோடு சரி என்று கிண்டலடித்தார். எவ்வளவு பெரிய தோல்வியைச் சந்தித்திருந்தாலும் திமுக எப்போதும் மக்களிடமிருந்து தூரமாக இருந்ததில்லை என்றும், மீண்டும் எழுச்சி பெற்று வருவோம் என்றும் உதயநிதி ஸ்டாலின் அந்தப் பொதுக்கூட்டத்தில் மிக ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
