LATEST NEWS
தலைகீழாக மாறிய வாஷிங்டன் – டெல்லி உறவு…மோடி என்னுடைய பெஸ்ட் பிரெண்ட்..இந்தியப் பொருட்களுக்கு விழுந்த சுங்க வரி அடி…2030-க்குள் நடக்கப்போகும் ‘500 பில்லியன் டாலர்’ மர்மம்…!”
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தனது சிறந்த நண்பர் எனக் குறிப்பிட்டு, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக, டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ஆரம்பக் கட்டத்தில் இந்தியப் பொருட்களுக்குக் கூடுதல் சுங்க வரிகளை விதித்ததால் இருதரப்பு வர்த்தக உறவுகளில் சுணக்கம் ஏற்பட்டது. எனினும், சமீபகாலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி வரும் சூழலில், வாஷிங்டன் மற்றும் டெல்லி இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்னுடைய நல்ல நண்பர், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்; எங்களுக்குள் நீண்டகாலமாக நல்ல நட்பு தொடர்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த காலங்களில் அமெரிக்காவின் கொள்கைகள் மூலம் இந்தியா மட்டுமே பயனடைந்து வந்த நிலையைத் தற்போது மாற்றியமைத்துள்ளதாகக் கூறிய டிரம்ப், இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பலனாக இப்போது இந்தியா மூலமாக அமெரிக்காவும் கணிசமான பணத்தை ஈட்டத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இந்த சுமுகமான சூழல் காரணமாகவே இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் சாத்தியமாகும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
சர்வதேச பொருளாதார அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள இந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில், சுங்க வரி குறைப்பு, அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருட்களுக்கான கூடுதல் அனுமதி, வேளாண் மற்றும் தொழில்துறை பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தங்களின் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்தப் பிரம்மாண்ட இலக்கு நிர்ணயித்துச் செயல்பட்டு வரும் வேளையில், டிரம்பின் இந்தச் சாதகமான அறிவிப்பு இந்திய வர்த்தகத் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
