LATEST NEWS
“ஈரான் வெள்ளைக் கொடி தூக்க வேண்டும்.. குறுக்கே வந்தால் ஓமன் மீதும் குண்டுவீசுவோம்..!” டிரம்பின் அதிரடி எச்சரிக்கை…!!
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஃபோக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஈரான் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகச் சரணடைய வேண்டும் என்றும், அவர்கள் சரணடைவதற்கான வெள்ளைக் கொடியை உயர்த்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சரணடைவதற்கு எந்த அவசரமும் காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்க கடற்படையின் முற்றுகையால் ஈரான் தினமும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை இழந்து வருவதாகவும், இந்த வாரத்தில் அவர்கள் மீது மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார். ஈரானின் ஆட்சியாளர்கள் நல்ல ராஜதந்திரிகள் என்றாலும், அவர்களின் பொருளாதாரம் தற்போது முற்றிலும் குலைந்துவிட்டதாக டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் தற்காலிக புதிய போக்குவரத்து பாதையை உருவாக்க ஈரானுடன் ஓமன் ஒப்பந்தம் எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து பேசிய டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஓமன் குறுக்கே நின்றால் அவர்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளார். முன்னதாக, ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும், அதை அமெரிக்காவின் பகுதியாக அறிவிக்கப்போவதாகவும் தெரிவித்திருந்த பின்னணியில் இக்கருத்தைக் கூறியுள்ளார். மேலும், ஈரான் அணுஆயுத வல்லரசாக மாறுவதைத் தடுப்பதே முதன்மை இலக்கு என்றும், இதுவரை மிகச் சிறிய ஆயுதங்களையே பயன்படுத்தியுள்ளதாகவும் பைடன் ஆட்சியில் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
காசா – இஸ்ரேல் விவகாரம் குறித்துப் பேசிய டிரம்ப், ஹமாஸ் அமைப்பினர் தங்களிடமுள்ள ஆயுதங்களைக் கைவிட்டு வருவதாகவும், எனவே காசா மீது இஸ்ரேல் இனி தொடர்ந்து தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
