LATEST NEWS
“ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதலா..?” லீக்கான டிரம்பின் ரகசிய திட்டம்.. நடுங்கும் உலக நாடுகள்..!!
ஈரான் மீதான அணு ஆயுதப் பயன்பாடு குறித்து வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் தீவிர ஆலோசனைக்கூட்டங்களை நடத்தி வருவதாக அமெரிக்காவின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா இனி ஈடுபடாது என்ற தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்கான எல்லைகளை தற்போதைய நிர்வாகம் குறைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் இன்னும் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலையை எட்டவில்லை என்ற அமெரிக்க உளவுத்துறையின் எச்சரிக்கைகளை நிர்வாகம் உதாசீனப்படுத்துகிறது.
இஸ்ரேலின் வழிகாட்டுதலின்படியே செயல்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். ஈரான் மீது அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அது ஒட்டுமொத்த உலகிற்கும் மிகப்பெரிய உலகப்போரை ஏற்படுத்துவதுடன், லட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கி கடுமையான பொருளாதாரச் சிக்கல்களையும் உருவாக்கும் என அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். கடந்த ஜூன் 2025-ல் ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பின்னணியில், டிரம்ப் தனது வெளிநாட்டுப் போர் எதிர்ப்புக் கொள்கையைக் கைவிட்டுவிட்டதாக கிரீன் இதற்கு முன்பும் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. கிரீனின் இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து வெள்ளை மாளிகையின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
