LATEST NEWS
“டெல்லி சுல்தான்களை விட விஜய் தான் மாஸ்…” அமித் ஷாவையும் விஜய்யையும் ஒப்பிட்டு பேசிய நாஞ்சில் சம்பத்..! இணையத்தில் கிளம்பிய விவாதம்…!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100-வது நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தவெக மூன்று ஆண்டுகளுக்குள் ஆட்சியைப் பிடித்திருப்பது இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை என்று குறிப்பிட்டார். அண்ணா ஆட்சியைப் பிடிக்க 18 ஆண்டுகளும், எம்ஜிஆர் 5 ஆண்டுகளும் எடுத்துக்கொண்ட நிலையில், எந்த தலைவரும் நிகழ்த்தாத வரலாற்று சாதனையாக விஜய் 3 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்துள்ளார் என்றும், விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் தற்போது அரசியல் செய்ய முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தவெக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், முந்தைய ஆட்சியில் போக்சோ வழக்குகள் அதிகம் வந்த நிலையில் தற்போது பெண்கள் பாதுகாப்பாக உணர்வதாகவும் அவர் கூறினார். மேலும் காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களில் தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானங்களில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த திருத்தங்களை முதல்வர் விஜய் காழ்ப்புணர்ச்சி இன்றி ஏற்றுக்கொண்டதாகப் பாராட்டினார். அத்துடன், இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விட அதிக செல்வாக்கு கொண்ட ‘பவர் ஸ்டார்’ தவெக தலைவர் முதல்வர் விஜய்தான் என்றும் அவர் பிரகடனம் செய்தார்.
திமுக மற்றும் பாஜக இடையேயான அரசியல் நெருக்கத்தைச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்த நாஞ்சில் சம்பத், பாஜகவின் காலில் விழுவதற்கு திமுக நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது என்றும், இரு கட்சிகளுக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதை முதலில் அம்பலப்படுத்தியவர் விஜய்தான் என்றும் கூறினார். தமிழகத்தை பாஜக காவிமயமாக்க முயன்றது போல், திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டி தமிழகத்தைக் கருணாநிதி மயமாக்க முயன்றதாகக் குற்றம்சாட்டினார். ஆனால், தவெக ஆட்சியில் பொதுவான பெயர்களே திட்டங்களுக்கு வைக்கப்படுவதாகவும், சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் பிரதமரின் குஜராத்தை விட தமிழகம் தற்போது முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
