LATEST NEWS
“என் கல்யாணத்த நிறுத்துங்க சார்” அதிகாலை 5:30 மணிக்கு போலீசுக்கு போன் போட்ட மணப்பெண்… தாலி கட்டும் நேரத்தில் ட்விஸ்ட்… அலறியடித்து ஓடிய மாப்பிள்ளை வீட்டார்..!!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவருக்கும் பெற்றோரால் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நேற்று அதிகாலையில் முகூர்த்தத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது, தூங்கிக் கொண்டிருந்த மணப்பெண்ணை அவரது பெற்றோர் எழுப்பி திருமணத்திற்குத் தயாராகுமாறு கூறியுள்ளனர். ஆனால், தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறி மணவறைக்கு வர மறுத்த மணப்பெண், அடம் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதோடு நிற்காமல், காலை 5.30 மணி அளவில் போலீஸ் அவசர உதவி எண் 100-க்கு போன் செய்து, தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முயல்வதாக அதிரடிப் புகார் அளித்துள்ளார்.
தகவலறிந்து அனைத்து மகளிர் போலீசாருடன் திருமண மண்டபத்திற்கு விரைந்து வந்த மீஞ்சூர் போலீசார், மணப்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையிலும் அவர் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்ததால், கோபமடைந்த பெற்றோர் அவரை மண்டபத்திலேயே தவிக்க விட்டுச் சென்றனர். இதையடுத்து போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு அலமாதி கிராமத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருமணம் நின்றதால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய நிலையில், மணப்பெண் யாரையாவது காதலிக்கிறாரா அல்லது குடும்பப் பிரச்சினையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
