LATEST NEWS
குடிமகள்களின் அட்டூழியம்.! “நீ என்னடா போலீஸ்” நடுரோட்டில் மதுபோதையில் கெட்ட வார்த்தைகளால் ரகளை செய்த இளம் பெண்கள்.. போக்குவரத்து போலீசாரையே அலறவிட்ட சம்பவத்தால் அதிர்ச்சி..!!
திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே உள்ள காவாங்கரை சந்திப்பில் மதுபோதையில் இரண்டு இளம் பெண்கள் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை இளைஞர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த இந்த பெண்கள், போதை தலைக்கேறிய நிலையில் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். விபத்து நடந்தவுடன் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, போதையில் இருந்த அந்த இரு பெண்களும் நடுரோட்டில் நின்று கொண்டு பொதுமக்களிடம் கடுமையான தகராறில் ஈடுபட்டனர். இதனைத் தட்டிக்கேட்ட போக்குவரத்து போலீசாரை நோக்கி, “நீ என்னடா போலீஸ்” என்று காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளை செய்துள்ளனர். இவர்களின் இந்த அநாகரிகமான செயலால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த புழல் காவல் நிலைய போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு செய்த இரு பெண்களையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அம்பத்தூரைச் சேர்ந்த அந்த இரு பெண்களில் ஒருவருக்கு 19 வயதும், மற்றொருவருக்கு 17 வயதும் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் இந்த விபத்து மற்றும் ரகளை குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
