LATEST NEWS
“யார் செத்தால் எங்களுக்கு என்ன..?” ஆற்று வெள்ளத்தில் டிரம்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட சடலம்… அதிகாரிகளின் அலட்சியத்தால் அரங்கேறிய கொடுமை..! மத்திய பிரதேச கிராமவாசிகளின் நெஞ்சைப் பிளக்கும் போராட்டம்..!!
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தின் ஜாவா தாலுகாவில், வெள்ளப்பெருக்கு மற்றும் சரியான சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் உயிரிழந்த ஒருவரின் உடலை டிரம்ஸ்கள் மூலம் செய்யப்பட்ட தற்காலிகப் படகில் எடுத்துச் செல்லும் அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப் பகுதிக்கு ஆம்புலன்ஸ் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், வேறு வழியின்றி கிராமவாசிகளே உயிரிழந்தவரின் உடலை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். சாலையில் பெருக்கெடுத்து ஓடும் ஆற்று நீரில் இரு டிரம்களை ஒன்றாகக் கட்டி, அதன் மேல் உடலை வைத்து அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், வெள்ளத்தில் மூழ்கிய சாலையில் நின்றபடி கிராம மக்கள் உடலைக் கொண்டு செல்வது பதிவாகியுள்ளது. மேலும், இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் கிராம பஞ்சாயத்து சர்பஞ்ச் தங்களது கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். “நாங்கள் எம்.எல்.ஏ-வின் ஆட்கள், இப்படித்தான் வேலை நடக்கும்; யார் செத்தால் என்ன, பிழைத்தால் என்ன என்று சர்பஞ்ச் கூறுவதாக” கிராம மக்கள் அக் காணொளியில் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கிராமப்புறங்களில் உள்ள அடிப்படை வசதிகளின்மை மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
ரேவா மாவட்டத்தில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் சந்திக்கும் துயரம் இது முதல் முறையல்ல. கடந்த ஜூலை மாத தொடக்கத்தில், இதே மாவட்டத்தில் சரியான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாத காரணத்தால், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு பழங்குடியினப் பெண் கட்டிலில் சுமந்து செல்லப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவமனையை அடையும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு மாத இடைவெளியில் அடுத்தடுத்து நடந்துள்ள இத்தகைய சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
