LATEST NEWS
“சின்னப் பையன் ஏதோ தெரியாம பேசிட்டான்” கலைஞரிடம் மன்னிப்பு கேட்ட எம்.ஜி.ஆர்… ஆ.ராசா நினைவுகூர்ந்த சட்டமன்ற வரலாற்று உண்மை..!!
பெரிய நடிகராக இருப்பதோ, ரூ. 750 கோடி சம்பளம் வாங்குவதோ, முதலமைச்சராக இருப்பதோ பெரிய விஷயமல்ல; எல்லாவற்றிற்கும் மேலாக மனிதனாக இருக்க வேண்டும் என்று திமுக முன்னாள் எம்.பி. ஆ.ராசா ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மானத்தையும், அரசியல் நாகரிகத்தையும் காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இழிவுபடுத்தியதாக முதலமைச்சர் விஜய்க்கு எதிராக திமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
தமிழகச் சட்டமன்றத்திற்குப் பெருமைமிக்க வரலாறும் நாகரிகமும் உண்டு எனக் கூறிய ஆ.ராசா, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கலைஞர் மீது நிலக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிகழ்வைக் சுட்டிக்காட்டினார். கலைஞருக்குச் செங்கல்பட்டில் 300 ஏக்கர் நிலம் இருப்பதாக அமைச்சர் குழந்தைவேலு கூறியபோது, அதை நிரூபிக்க சவால் விடுத்தார் கலைஞர். குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாததால் அமைச்சர் பதவி விலகும் சூழல் உருவானது. அப்போது எம்.ஜி.ஆர் நேரில் வந்து “சின்னப் பையன் ஏதோ அறியாமல் பேசிவிட்டான், மன்னித்துவிட்டு அமைச்சராகத் தொடர அனுமதியுங்கள்” என்று அன்போடு கேட்டுக்கொண்டார், கலைஞர் பெருந்தன்மையுடன் அவரை மன்னித்து அமைச்சராகத் தொடர ஒப்புக்கொண்டார்.
ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் காரசாரமான விவாதங்களுக்கு நாகரிகமாகப் பதிலளித்த வரலாறு திராவிட இயக்கத்திற்கு உண்டு என்று சுட்டிக்காட்டிய அவர், இன்றைய சூழலில் சிலர் அரசியல் நாகரிகத்தைச் சீர்குலைப்பது வேதனை அளிப்பதாகக் கூறினார். மேலும், சட்டமன்ற கேலரியில் இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், முதலமைச்சர் அவையில் வரலாற்று உண்மைகளுக்கு மாறாகவும் அநாகரிகமாகவும் பேசும்போது அதைச் சுட்டிக்காட்டாமல் அமைதியாக இருந்து தேசத்திற்குத் துரோகம் செய்யக்கூடாது என்றும் எச்சரித்தார்.
1976-ல் எமர்ஜென்சியின் போது மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு அப்போது 23 வயது மட்டுமே; திருமணமாகி சில மாதங்களே ஆகியிருந்தன. சிறையில் காவல்துறையினரின் கொடூரமான தாக்குதலால் தாடையிலும் கைகளிலும் படுகாயமடைந்து ரத்தம் சொட்டச் சொட்டக் கிடந்தார். அவரைப் பாதுகாக்க முயன்ற சிட்டிபாபு என்ற தியாகி, காவல்துறையின் தாக்குதலுக்கு இரையாகிச் சிறையிலேயே உயிரைத் துறந்தார்.
சிறையில் காயங்களுடன் இருந்த மகனைப் பார்க்கச் சென்ற கலைஞர், பதறிப்போய் “தம்பி, போலீஸ் உன்னை அடித்ததா?” என்று கேட்டார். அதற்கு ஸ்டாலின், “அப்பா, எனக்கு விழுந்த அடிகளை விசாரிக்க நீங்கள் வர வேண்டாம்; இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீதும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும்தான் அடி விழுந்திருக்கிறது, தயவுசெய்து இந்த தேசத்தைக் காப்பாற்றுங்கள்” என்று கூறிய வரலாற்று நிகழ்வை ஆ.ராசா நினைவுகூர்ந்தார்.
