CRIME
“என்னை நிம்மதியாக சாக விடுங்கள்..” மாமியார், கணவர் செய்த கொடூரம்.. நாத்தனாருக்கு அனுப்பிய கடைசி வாட்ஸ்அப் மெசேஜ்.. மாடல் அழகி தற்கொலை வழக்கில் சிபிஐ திடுக்கிடும் குற்றப்பத்திரிகை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மாடல் அழகியும் நடிகையுமான த்விஷா ஷர்மா, கடந்த மே 13 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை மற்றும் தொடர் மன உளைச்சல் காரணமாகவே தனது மகள் கொல்லப்பட்டதாக அவரது தந்தை நவ்நீதி ஷர்மா குற்றம்சாட்டியிருந்த நிலையில், தலைமறைவாக இருந்த கணவர் சமர்த் சிங் மற்றும் அவரது தாயாரும் முன்னாள் மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, போபால் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், கணவர் சமர்த் சிங்கின் தொடர் அவமானங்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு மாமியார் கிரிபாலா சிங் முழு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தியுள்ளதாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலாலேயே த்விஷா தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் மாதம் கர்ப்பமான த்விஷா, குடும்பத்தில் நிலவிய கசப்பான சூழல் காரணமாக அதைக் கலைக்க முடிவெடுத்ததும், இதனால் அவர்களிடையே மோதல் தீவிரமடைந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்துகொள்வதற்குச் சற்று முன்பு மே 12-ம் தேதி இரவு தனது நாத்தனார் ராஷிக்கு த்விஷா அனுப்பிய வாட்ஸ்அப் குறுஞ்செய்தி இவ்வழக்கில் மிக முக்கிய ஆதாரமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அதில், “உன் அண்ணனிடம் அவரது மனைவியின் எஞ்சிய உடலை வந்து எடுத்துக்கொள்ளச் சொல். இப்போது என்னை நிம்மதியாக சாக விடுங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, த்விஷாவின் ஐபோன், சிசிடிவி காட்சிகள் மற்றும் குரல் மாதிரிகளின் தடயவியல் பரிசோதனை முடிவுகள் வரும் பட்சத்தில் இந்த வழக்கின் விசாரணை மேலும் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
