LATEST NEWS
பகீர் வீடியோ… பட்டப்பகலில் தெருவில் பாய்ந்து சிறிய நாய்களை கடித்துக் கொன்ற 60 கிலோ பிரமாண்ட நாய்…! ஹாங்காங்கில் பதறவைக்கும் கொடூரம்..!!
ஹாங்காங்கில் உள்ள யுயென் லாங் பகுதியில் யோஹோ மால் வாகன நிறுத்துமிடம் அருகே திங்கட்கிழமை மதியம் 3 மணி அளவில் ஒரு கொடூரமான நாய்த் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது. சுமார் 60 கிலோ எடையும் 1.5 மீட்டர் நீளமும் கொண்ட ஒரு கலப்பின நாய், சங்கிலியால் கட்டப்படாமல் திறந்துவிடப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்துள்ளது. அப்போது 58 வயதுடைய நபர் ஒருவர் நடைபயிற்சியாக அழைத்து வந்த 17 வயதான, 5 கிலோ எடையுள்ள ‘மினியேச்சர் பூடில்’ என்ற சிறிய ரக நாயை அந்தப் பெரிய நாய் கொடூரமாகக் கடித்துக் குதறியது. படுகாயமடைந்த அந்தச் சிறிய நாயை அதன் உரிமையாளர் உடனடியாகக் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
முதல் சம்பவம் நடந்த 20 நிமிடங்களுக்குள், பூங்கா அருகே அதே பெரிய நாய் 4 வயதான 5 கிலோ எடையுள்ள ‘பிச்சான் ஃபிரைஸ்’ என்ற மற்றொரு சிறிய நாயையும் தாக்கியது. மக்கள் தடுத்து நிறுத்த முயன்றபோதிலும் அந்த நாய் கடிப்பதை நிறுத்தவில்லை; இதனால் அந்தச் சிறிய நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பெரிய நாய் சிறிய நாயின் கழுத்தைக் கவ்விப்பிடித்திருக்க, அதன் உரிமையாளர் செய்வதறியாது கவலையுடன் தரையில் அமர்ந்திருப்பதும், அங்கிருந்த பொதுமக்கள் நாயை விலக்க முயற்சிப்பதும் அடங்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் பெரிய நாயைப் பிடித்தனர். அந்த நாய் கழுத்துப்பட்டை அணிந்திருந்ததால் அது தெருநாய் அல்ல என்பது உறுதியானாலும், அதன் உரிமையாளர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. ஹாங்காங் விதிமுறைகளின்படி, பொது இடங்களில் 20 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ள பெரிய நாய்களை அழைத்து வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்குச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
