LATEST NEWS
ரூ.850 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனையில் ஒரு ஸ்ட்ரெச்சர் கூட இல்ல… 11 வயது மகளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனை வளாகத்தில் கதறிய தாய்… பீகாரில் அரங்கேறிய அவலம்…!!
பீகாரின் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு பெரிய வாக்குறுதிகளும் உரிமைகோரல்களும் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், பெத்தியா பகுதியில் அமைந்துள்ள GMCH மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஒரு காணொளி அம்மாநிலத்தின் சுகாதார நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. சுமார் ரூ. 850 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த மிகப்பெரிய அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஒரு ஸ்ட்ரெச்சர் கூட கிடைக்காத அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால், நவீன வசதிகள் உள்ளதாகக் கூறப்படும் மருத்துவமனைகளில் கூட அடிப்படை வசதிகள் எங்கே என்ற கேள்வி அம்மாநில மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சம்பவத்தன்று, சன்பட்டியா காவல் எல்லைக்குட்பட்ட மஹனா கிராமத்தைச் சேர்ந்த நசீர் அன்சாரி என்பவரின் 11 வயது மகள் சயானா கதூன் என்பவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரைச் சிகிச்சைக்காக பெற்றோர் பெத்தியா GMCH மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால், மருத்துவமனை வளாகத்தை அடைந்ததும் சிறுமியை உள்ளே அழைத்துச் செல்ல ஒரு ஸ்ட்ரெச்சர் கூட கிடைக்கவில்லை. இதன் காரணமாக, அப்பெண்ணின் தாய் வேறு வழியின்றி தனது 11 வயது மகளைத் தன் தோளில் சுமந்தபடியே, மருத்துவமனை வளாகத்திற்குள் மருத்துவ சிகிச்சைக்காக அங்கும் இங்கும் கதறியபடி அலைந்து திரிந்தார்.
இந்த அவலக் காட்சி தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை குறித்து கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் அனில் குமார் கூறுகையில், இந்த காணொளி தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும், மருத்துவமனையில் சில ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதே இத்தகைய சூழலுக்குக் காரணம் என்றும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, தேவையான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
