LATEST NEWS
மகளுக்காகச் சமையல்காரராக மாறிய தந்தை…! “அகான்ஷாவின் மரணம் தற்கொலை அல்ல, படுகொலை…” நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல்காந்தி…!!
கடந்த மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு, வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் குளறுபடிகளால் ஏற்பட்ட மன உளைச்சலில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பயிற்சி பெற்று வந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அகான்ஷா சதுர்வேதி என்ற மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மத்திய அரசை வன்மையாகக் கண்டித்துப் பதிவிட்டுள்ளார். ஏழை விவசாயியான அகான்ஷாவின் தந்தை, தனது மகளின் மருத்துவர் கனவிற்காகக் கடன் அட்டையின் மூலம் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதுடன், மகளுக்குத் துணையாக நாக்பூரிலேயே சமையல்காரராக வேலை பார்த்து வந்த நெகிழ்ச்சியான பின்னணியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அலட்சியத்தாலும், வினாத்தாள் கசிவு போன்ற தொடர் குளறுபடிகளாலும் ஏற்பட்டுள்ள இந்தத் தேர்வு நிச்சயமற்ற சூழலே அகான்ஷாவின் மரணத்திற்குக் காரணம் என்று ராகுல்காந்தி சாடியுள்ளார். இந்தத் துயரம் ஒரு சாதாரணத் தற்கொலை அல்ல என்றும், பிரதமர் மோடி தலைமையிலான ஊழல் நிறைந்த மற்றும் சீரழிந்த நிர்வாக அமைப்பால் நடத்தப்பட்ட படுகொலை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தனை பெரிய முறைகேடுகள் நடந்தும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எவ்விதப் பொறுப்பும் ஏற்காமல் தனது பதவியில் நீடிப்பதையும், எந்தவொரு உருப்படியான சீர்திருத்தமும் செய்யப்படாததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 12 ஆண்டுகால பாசிச ஆட்சியில் ஒட்டுமொத்தக் கல்வி முறையும் சீரழிக்கப்பட்டதன் விளைவை இந்தியாவின் இளம் தலைமுறையினர் தங்கள் உயிரைக் கொடுத்து அறுவடை செய்து வருகிறார்கள் என்றும் ராகுல்காந்தி காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
