LATEST NEWS
“அமெரிக்காவுக்கு அதிரடி செக் வைக்கும் ஈரான்..!” ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் போட்ட புது கண்டிஷன்ஸ்..!!
அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் போர் முடிவுக்கான ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை வணிக கப்பல்கள் எளிதாக கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது தொடர்பாகத்தான் தற்போது சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஈரானின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான உச்ச தேசிய பாதுகாப்பு மன்றம் அமெரிக்கா தனது நடத்தையைச் சரிசெய்து கொள்ளும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றம் முன்வைத்துள்ள நிபந்தனைகளில்: அமெரிக்கா இனி ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தக்கூடாது. ஈரானுடனும் அப்பிராந்தியத்தில் உள்ள அதன் ஆயுதமேந்திய கூட்டாளிகளுடனும் நடத்தி வரும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா நீக்க வேண்டும். அத்துடன் அப்பகுதியிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும். போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும். பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இதற்கு அமெரிக்கா தரப்பில் உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர டிரம்பிற்கு, அமெரிக்க தளபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அமெரிக்கா- ஈரான் இடையிலான போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற அபுதாபியைச் சேர்ந்த ADNOC எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் மீது ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், போர் தொடங்கியதில் இருந்து 12-க்கும் அதிகமான கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
