LATEST NEWS
ஏர் இந்தியா ‘டர்புலன்ஸ்’ வழக்கில் திடீர் திருப்பம்..! சஸ்பெண்ட் செய்யப்பட்ட கேப்டன்… பகீர் கிளப்பும் உண்மை..!!
ஆகஸ்ட் 4 அன்று தாய்லாந்தின் பூக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் திடீரென ஏற்பட்ட ‘டர்புலன்ஸ்’ காரணமாக சுமார் 300 அடி கீழே இறங்கியது. இதனால் விமானத்திலிருந்த 137 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களில் 13 பயணிகள் மற்றும் 4 கேபின் க்ரூ உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 17 பேர் காயமடைந்து டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் சீட் பெல்ட் அணியாததே இந்த காயங்களுக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிறகு நடத்தப்பட்ட பிரீத் அனலைசர் பரிசோதனையில் விமானிகள் மது அருந்தவில்லை எனத் தெரியவந்தது. இருப்பினும், விமான விபத்து புலனாய்வு அமைப்பின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட ‘சைக்கோஆக்டிவ் சப்ஸ்டன்ஸ்’ பரிசோதனையில், விமானத்தை ஓட்டிய 30 வயதுடைய கேப்டனுக்கு முடிவுகள் ‘பாசிட்டிவ்’ என வந்ததாகத் தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், ‘Confirmatory Test’ எனப்படும் இறுதிப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும். விமானி மருத்துவக் காரணங்களுக்காக உட்கொண்ட வழக்கமான மருந்துகள் இந்த முடிவுக்குக் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்விவகாரம் குறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “விமானிகளுக்கு வழக்கமான போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால், அதன் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் ஏர் இந்தியாவிடம் பகிரப்படவில்லை என்பதால் இது குறித்து இப்போது கருத்து தெரிவிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை நிலுவையில் உள்ளதால், விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட விமானிகள் பணி செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.
