LATEST NEWS
“என் மண்டையிலேயே பிளந்திருக்கும்..!” மம்தா பானர்ஜி கார் மீது பயங்கரக் கல்வீச்சு… உயிர்தப்பிய அதிர்ச்சி சம்பவம்..!!
மேற்கு வங்க மாநிலம் பாரக்பூர் பகுதிக்குச் சென்ற முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் கார் மீது மர்ம நபர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மம்தா பானர்ஜியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், திடீரென அவரது காரைச் சூழ்ந்து கொண்டு காரின் மீது சேற்றைப் பூசியுள்ளனர். மேலும், ஆத்திரமடைந்த கும்பல் தண்ணீர்ப் பாட்டில்கள் மற்றும் காலணிகளை காரை நோக்கி வீசியெறிந்ததால் அந்த இடமே பதற்றமான சூழலுக்குத் தள்ளப்பட்டது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் தீவிரத்தை விவரிக்கும் வகையில் மம்தா பானர்ஜி பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. அதில், “சமூக விரோதிகள் காரை நோக்கி வீசிய பெரிய கற்கள் மட்டும் என் மீது பட்டிருந்தால், எனது மண்டையே பிளந்திருக்கும்” என அவர் மிகுந்த அச்சத்தோடும் கொந்தளிப்போடும் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரின் வாகனத்தின் மீதே இதுபோன்ற வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மேற்கு வங்கத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்துப் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது.
