Tamilnadu
பள்ளிக் கழிவறையில் போதைப்பொருள்… மாணவர் கைகளில் எப்படி வந்தது..?தமிழக அரசை உலுக்கிய வானதி சீனிவாசனின் அதிரடி கேள்விகள்…!!
பள்ளி கழிவறையில் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக கல்வித்துறையின் அலட்சியப்போக்கைக் கண்டித்து பாஜக மூத்த நிர்வாகி வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களிடையே பள்ளி கழிவறையில் திடீரென மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட தீவிர சோதனையில், மாணவர்கள் பள்ளிக்குள்ளேயே போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு, அதுதொடர்பான செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஒழுக்கத்தையும் கல்வியையும் போதிக்க வேண்டிய புனிதமான பள்ளி வளாகத்திற்குள் போதைப்பொருள் புழக்கமும், அடிதடி கலாசாரமும் ஊடுருவியிருப்பது மாணவர்களின் எதிர்காலத்தையே முற்றிலுமாகச் சிதைத்துவிடும் ஆபத்தான சூழலாகும் என்று வானதி சீனிவாசன் எச்சரித்துள்ளார். ஏற்கனவே தமிழகப் பள்ளிகளை ‘ரீல்ஸ் ஸ்பாட்டாக’ மாற்றிய தவெக அரசின் அலட்சியப்போக்கால், தற்போது போதைப்பொருட்களும் பள்ளி மாணவர்களிடம் மிகச் சாதாரணமாகச் சென்றடைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் சாடியுள்ளார். எழுதுகோல் பிடிக்க வேண்டிய பிஞ்சுக்கரங்களில் இத்தகைய போதைப்பொருட்கள் புழங்குவது தமிழகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
பள்ளிகளைச் சுற்றி புகையிலைப் பொருட்கள் விற்கக் கூடாது என்ற தடைச் சட்டம் பெயரளவுக்கு மட்டும்தான் உள்ளதா என்றும், மாணவர்களுக்கு இந்தப் போதைப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, தமிழக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பள்ளி வளாகங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தன் எக்ஸ் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
