CINEMA
அவங்களுக்கு ஒரு நீதி, எனக்கு ஒரு நீதியா?…எனக்கு சம்மன் அனுப்பியது இதனால்தான்…டிவிகே-வுக்கு எதிராகப் பேசினால் சிறையா?…தற்போதைய ஆட்சி குறித்துப் பயம் தெரிவித்து ஜூலி வெளியிட்ட பகீர் குற்றச்சாட்டு…!
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே பிரபலமான ஜூலி, சமீபகாலமாகத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அரசியல் ரீதியான கருத்துக்களையும், குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகம் (டிவிகே) கட்சிக்கு எதிரான விமர்சனங்களையும் தீவிரமாகப் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சென்னை மெரினா பீச் காவல் நிலையத்திலிருந்து தனக்கு விசாரணை சம்மன் வந்திருப்பதாகவும், தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜூலி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தான் ஏற்கனவே கொடுத்த புகார்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது தன் மீதே வழக்குப் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்துப் பேசிய ஜூலி, மெரினா கடற்கரையில் நின்று கொண்டு ‘டிவிகே வல்கர் வாரியர்களால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ என்ற வாசகம் அடங்கிய அணில் புகைப்படம் போட்ட போர்டையும், மற்றொரு பக்கம் ‘திமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்ற போர்டையும் பிடித்து நின்றதற்காகவே தன் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அலிஷா அப்துல்லா கொடுத்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறை, தான் கொடுத்த புகார்களைக் கண்டுகொள்ளவே இல்லை எனச் சாடியுள்ளார். நீதிமன்றங்கள் விடுமுறையாக இருக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனக்கு ஃபோன் செய்து விசாரணைக்கு வரச் சொல்வது திட்டமிட்ட செயல் என்றும், தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் பயத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இறுதியாகப் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ள ஜூலி, யாராவது டிவிகே கட்சிக்கு எதிராகப் புகார் கொடுக்க நினைத்தால் முன்னாடியே யோசித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். நீங்கள் கொடுக்கும் புகாரை இந்த காவல்துறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது, மாறாகப் புகார் அளிக்கச் செல்லும் உங்கள் மீதே புதிய வழக்கைப் போட்டு உங்களைச் சிறையில் தள்ளப் பார்ப்பார்கள் என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை ஜூலி முன்வைத்துள்ளார். அரசியல் விமர்சனத்தால் ஜூலிக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ள இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
