CINEMA
யாரு அந்த இடியட்?…பட பூஜையிலேயே இப்படியா?… தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷை கையை பிடித்து தள்ளிய மூத்த இயக்குநர்…டோலிவுட்டில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!
தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் இயக்குநர் அனில் ரவிப்புடி, நடிகர் வெங்கடேஷ் டகுபதியுடன் இணையும் புதிய படத்தின் பூஜை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் இப்படத்தின் கதாநாயகிகளான தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் மற்றும் இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி ஆகியோர் பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து கலந்துகொண்டனர். சமீபத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி 300 கோடிக்கும் மேல் வசூலித்த ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, அனில் ரவிப்புடி இயக்கும் படம் என்பதால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், இந்த விழாவில் நடந்த ஒரு எதிர்பாராத சம்பவம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
விழாவின் போது, தெலுங்கு திரையுலகின் மூத்த இயக்குநரான ராகவேந்திரா ராவ், நடிகை கீர்த்தி சுரேஷின் கையைப் பிடித்து “அந்தப் பக்கம் தள்ளிப்போம்மா” என்று நகர்த்திவிட்டு, இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியைத் தன் அருகே அழைத்து அவரது தோள் மீது கை வைத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவியதுடன், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பிரபல சினிமா விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “யாரு அந்த இடியட்?” என்று மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பி, தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
நடிகைகளின் அனுமதியின்றி கையைப் பிடித்து இழுப்பதும், அத்துமீறி நடப்பதும் அநாகரிகமானது எனப் பலரும் ராகவேந்திரா ராவை சமூக ஊடகங்களில் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். அதேவேளையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தெலுங்கு சினிமா ரசிகர்கள், “அங்கு எந்தத் தவறும் நடக்கவில்லை; பொதுவாகப் பூஜை முடிந்ததும் கடமைக்காகச் சில காட்சிகள் படமாக்கப்படும், அதற்கு எப்படி ‘ஷாட்’ வைக்க வேண்டும் என்பதை அனில் ரவிப்புடிக்குச் சொல்லிக் கொடுக்கும் விதமாகவே மூத்த இயக்குநர் ராகவேந்திரா ராவ் அவ்வாறு செய்தார்” என்று விளக்கம் அளித்து வருகின்றனர். இருப்பினும், ராகவேந்திரா ராவ் ஏற்கனவே நடிகைகளிடம் இதுபோல நடந்துகொண்ட முந்தைய வீடியோக்களையும் நெட்டிசன்கள் தற்போது வைரலாக்கி விவாதத்தை நெகிழச் செய்து வருகின்றனர்.
