LATEST NEWS
ராணுவ வீரர் கொலை…காப்பீட்டுப் பணத்தை சுருட்ட கணவனுக்கு சலைன் பாட்டிலில் விஷம்…அண்ணன் எப்படி திடீரென இறந்தார்?… சகோதரிக்கு வந்த சந்தேகம்… கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த கள்ளக்காதல் மர்மம்…டாக்டர்கள், அதிகாரிகள் உட்பட 9 பேர் கைது…!
கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சந்தீப் (46) என்பவர், தனது பெயரில் 2 கோடி ரூபாய்க்கு காப்பீடு (Insurance) செய்திருந்தார். இவரது மனைவி சுமா, கணவர் ராணுவத்தில் பணியாற்றிய சமயத்தில் மற்றொரு நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தச் சூழலில், கடந்த மார்ச் 5-ம் தேதி சந்தீப் ஒரு பைக் விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்துச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த சுமா, கணவனைக் கொன்றுவிட்டு அவரது 2 கோடி ரூபாய் காப்பீட்டுப் பணத்தைச் சுருட்டத் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டினார்.
அதன்படி, மார்ச் 15-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சந்தீப்பிற்கு, சுமா தனது காதலனுடன் சேர்ந்து சலைன் பாட்டில் மூலமாக ரகசியமாக விஷத்தைச் செலுத்தியுள்ளார். விஷம் உடல் முழுவதும் பரவியதில் சந்தீப் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் விபத்தின் தீவிரத்தால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக உறவினர்களை அழுது நம்ப வைத்த சுமா, உடனே இறுதிச் சடங்குகளையும் செய்து முடித்தார். அதன் பின்னர், காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காகச் சில அரசு அதிகாரிகள், மருத்துவ மற்றும் ஆய்வக ஊழியர்களின் உதவியோடு, சந்தீப் மாரடைப்பால் தான் இறந்தார் எனப் போலி ஆவணங்களைத் தயாரித்துக் காப்பீட்டு நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார்.
விபத்தில் சிக்கி நன்றாகத் தேறி வந்த தனது சகோதரன் திடீரென மாரடைப்பால் எப்படி உயிரிழக்க முடியும் எனச் சந்தீப்பின் சகோதரிக்கு பலத்த சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் சுமாவைப் பிடித்துக் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்ததைச் சுமா ஒப்புக்கொண்டார். இந்த அதிர்ச்சித் திருப்பத்தைத் தொடர்ந்து, கொலையாளி சுமா, அவரது கள்ளக்காதலன் மற்றும் போலி ஆவணங்கள் தயாரிக்க உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள் உட்பட மொத்தம் 9 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
