LATEST NEWS
ஒரே நாளில் 3 அதிநவீன போர்க்கப்பல்கள்…எதிரி நாட்டு ரேடாருக்கு அல்வா கொடுக்கும் ‘ஐஎன்எஸ் துனகிரி…கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இனி எமன் தான்…உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்த பிரதமர் மோடியின் அறிவிப்பு…!
மத்திய அரசின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் கீழ், இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகம் வடிவமைத்து, கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் நிறுவனத்தால் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3 அதிநவீன போர்க்கப்பல்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் ஐஎன்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் அக்ராய் மற்றும் ஐஎன்எஸ் சன்ஷோதக் ஆகிய கப்பல்கள் கடற்படையில் முறைப்படி இணைக்கப்பட்டன. சுமார் 75 சதவீத உள்நாட்டுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த மூன்று கப்பல்களும் ஒரே நேரத்தில் கடற்படையில் இணைந்திருப்பது, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது.
இந்தக் கப்பல்களில், ‘புராஜெக்ட் 17 ஏ’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 5-வது அதிநவீன ஸ்டெல்த் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் துனகிரி’ (INS Dunagiri) மிக முக்கியமானது ஆகும். எதிரிகளின் ரேடார் கண்ணில் சிக்காமல் மறைந்து சென்று தாக்கும் ‘அட்வான்ஸ்ட் ஸ்டெல்த்’ தொழில்நுட்பம் கொண்ட இக்கப்பலில், பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகக் குறிவைத்து அழிக்க முடியும். அடுத்ததாக இணைக்கப்பட்டுள்ள ‘ஐஎன்எஸ் அக்ராய்’ (INS Agray), கடலுக்கடியில் இருக்கும் அச்சுறுத்தல்களை முறியடிக்கும் வல்லமை கொண்டது. இது ‘அர்னாலா கிளாஸ்’ எனப்படும் ஆழமற்ற கடற்பகுதியில் பயணிக்கும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல் ஆகும். இதில் பொருத்தப்பட்டுள்ள இலகுரக டார்பிடோக்கள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் சோனார் அமைப்புகள் மூலம் எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை எளிதில் கண்டறிந்து அழிக்க இயலும்.
மூன்றாவது கப்பலான ‘ஐஎன்எஸ் சன்ஷோதக்’ (INS Sanshodak) ஒரு பிரமாண்டமான ஆய்வுக் கப்பல் (Survey Ship) ஆகும். கடலாய்வுப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பெரிய ரக சர்வே கப்பல்களின் வரிசையில் இது 4-வதாகக் கடற்படையில் இணைகிறது. ஆழ்கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள நிலப்பரப்புகளைத் துல்லியமாக வரைபடம் (Map) தயாரிக்க உதவும் இக்கப்பலில், ஏயூவி (AUV) மற்றும் ஆர்ஓவி (ROV) உள்ளிட்ட மேம்பட்ட தன்னாட்சி மற்றும் ரிமோட் மூலம் இயங்கும் ஆய்வு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு, தாக்குதல் மற்றும் கடல்சார் ஆராய்ச்சி எனப் பல்வேறு துறைகளில் இந்தியக் கடற்படையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் மைல்கல்லாக இந்த முப்படை கப்பல்களின் சேர்க்கை பார்க்கப்படுகிறது.
