LATEST NEWS
விஜய் கட்சிக்கு புதிய தலைவலி.. அமைச்சர் விக்னேஷ் பெயரைச் சொல்லி ரூ.22 லட்சம் சுருட்டல்… தவெக நிர்வாகிகள் அதிரடி கைது..!!
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷின் பெயரைப் பயன்படுத்தி, விருதுநகர் மாவட்டம் முழுவதும் மதுபானங்களைக் கொண்டு செல்வதற்கான பிரத்யேக போக்குவரத்து உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.22 லட்சம் மோசடி செய்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். லாரி உரிமையாளர் ஒருவரிடம் இந்த உரிமத்தை வாங்கித் தருவதாகக் கூறி இவர்கள் இருமடங்காகப் பணத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், நீண்ட நாட்களாகியும் உரிமம் கிடைக்காததால் சந்தேகமடைந்த அந்த லாரி உரிமையாளர், நேரடியாக அமைச்சர் விக்னேஷையே தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இச்சம்பவம் குறித்துப் புகாரளித்துள்ளார்.
அமைச்சரின் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்றதைத் தொடர்ந்து, அவரது அறிவுறுத்தலின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தவெக தலைவர் விஜய், கட்சியில் முறைகேடுகள் மற்றும் ஊழல் புகார்களில் சிக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்த நிலையில், அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சரின் பெயரைச் சொல்லிப் பண மோசடியில் ஈடுபட்டு கைதாகியுள்ள சம்பவம் விருதுநகர் மாவட்டத்திலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
