LATEST NEWS
இதுதாங்க நம்ம இந்தியா.? “தோல்வியால் ரிங்கிற்குள் கதறி அழுத இங்கிலாந்து வீராங்கனை”.. ஓடிச்சென்று கட்டிப்பிடித்த இந்திய வீராங்கனை… காமன்வெல்த் அரங்கையே நெகிழ வைத்த சாக்ஷி சவுத்ரியின் வைரல் வீடியோ..!!
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் , பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாக்ஷி சவுத்ரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சனிக்கிழமையன்று நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த 19 வயதான இளம் வீராங்கனை ரூபி ஒயிட்டை 5-0 என்ற கணக்கில் ஒருமனதாக வீழ்த்தி சாக்ஷி அபாரமாகத் தங்கம் வென்றார். இப்போட்டியில் தனது உயரத்தையும், கைகளின் நீளத்தையும் சாதகமாகப் பயன்படுத்திய சாக்ஷி, தொடக்கம் முதலே துல்லியமான இடது கை குத்துகள் மூலம் எதிராளியை நிலைதடுமாறச் செய்து ஆட்டத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.
போட்டியின் இறுதி மணி ஒலித்தவுடன் நடுவர் சாக்ஷி சவுத்ரியின் கையை உயர்த்தி வெற்றியை அறிவித்த அந்த நொடியில், தோல்வியால் ஏமாற்றமடைந்த இங்கிலாந்து வீராங்கனை ரூபி ஒயிட் ரிங்கிற்குள்ளேயே கைகளால் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். தனது சொந்த நாட்டு ரசிகர்களின் முன்னிலையில் தங்கப் பதக்கத்தை நழுவவிட்ட வேதனையில் கோணலில் அமர்ந்து அவர் தேம்பிக் அழுத காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ்த்தியது. அப்போது தனது வெற்றிக் கொண்டாட்டத்தை தற்காலிகமாகத் தள்ளிவைத்த இந்திய வீராங்கனை சாக்ஷி, உடனடியாக ரூபி ஒயிட் அருகில் சென்று அவரை அன்போடு கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். சர்வதேச விளையாட்டு அரங்கில் எதிராளியையும் மதிக்கும் இரு வீராங்கனைகளின் இந்த உயரிய விளையாட்டுப் பண்பு ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.
இந்த மகத்தான வெற்றியின் மூலம், கிளாஸ்கோ காமன்வெல்த் தொடரில் இந்தியா தனது 9-வது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றிப் பெருமை சேர்த்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள சாக்ஷி சவுத்ரிக்கு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கிடைக்கும் முதல் பதக்கமே இந்த தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடப்புத் தொடரில் இந்தியாவிற்கு குத்துச்சண்டைப் பிரிவில் தங்கம் வென்று தந்த மூன்றாவது வீராங்கனையாகவும் சாக்ஷி சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
