LATEST NEWS
“அப்படிப் படிக்கக் கூடாது…” சட்டமன்றத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு பாடம் எடுத்த சபாநாயகர்… தவறான உச்சரிப்பால் சட்டசபையில் சலசலப்பு…!!
தமிழகச் சட்டமன்றத்தில் காவிரி நதிநீர் விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், மேகதாது அணைப் பிரச்சினை எழுந்தவுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட அவசர ஆலோசனைகளையும், பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்ததையும் விவரித்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிமையுள்ள தண்ணீர் பங்கீட்டில் எந்தவொரு புதிய நடுவர் மன்றத்தாலும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும், கர்நாடகா வழங்க வேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீரின் அளவு மாறாது என்றும் அவர் உறுதியளித்தார். ஆனால், உரையின் போது எண்களை அவர் தவறாக உச்சரித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனைக் கவனித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் குறுக்கிட்டு, அமைச்சர் ‘117.25’ என்று தவறாகக் குறிப்பிட்டதை ‘177.25’ என அவைக்குறிப்பில் மாற்றிக்கொள்ள அறிவுறுத்தினார். மேலும், தசம எண்களைக் குறிப்பிடும் கணித விதிமுறைப்படி புள்ளிக்கு அடுத்துள்ள எண்களை இருபத்தி ஐந்து என்று மொத்தமாகப் படிக்காமல், இரண்டு ஐந்து எனத் தனித்தனியாகவே உச்சரிக்க வேண்டும் என்று அமைச்சருக்குத் தகுந்த விளக்கம் அளித்துத் திருத்தினார். இதனைத் தொடர்ந்து, மேகதாது அணை விவகாரத்தில் அவையிலுள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டதால், இனிமேல் இப்பிரச்சினை குறித்து அவையில் விவாதிக்க அனுமதி இல்லை என்றும் சபாநாயகர் திட்டவட்டமாக அறிவித்தார்.
