LATEST NEWS
“என்னால் விட்டு கொடுக்க முடியாது…” தி.மு.க தலைமைக்கு எதிராக பொதுசெயலாளர் துரைமுருகன் போர்க்கொடி…. மு.க.ஸ்டாலின் போடும் மாஸ்டர் பிளான்….!!
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் தி.மு.க-வை முழுமையாகப் புதுப்பிக்கும் பணிகளில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், பொதுசெயலாளர் துரைமுருகனின் பதவி குறித்துப் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. வயது மற்றும் உடல்நலக் குறைபாடுகள் காரணமாக அவருக்கு ஓய்வளித்துவிட்டு, அந்தப் பொறுப்பிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த தலைவர்களை நியமிக்கத் தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனால், இந்த யோசனைக்குத் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தனது பதவிக்காலம் வரும் 2027 வரை உள்ளதால் பொறுப்பைத் தம்மால் விட்டுக்கொடுக்க முடியாது என்றும், மறைந்த பேராசிரியர் அன்பழகன் உடல்நலிவுற்ற போதும் இறுதிவரை அப்பதவியிலேயே நீடித்ததைச் சுட்டிக்காட்டியும் அவர் தனது உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகத் தி.மு.க-வின் முக்கிய அரசியல் மற்றும் கூட்டணிக் கூட்டு முடிவுகளில் துரைமுருகன் ஓரங்கட்டப்படுவதாகக் கூறப்படும் நிலையில், எம்.எல்.ஏ-க்கள் கூட்ட அறிவிப்புக் கூட அவரது பெயருக்குப் பதிலாகக் கட்சியின் கொறடா பெயரில் வெளியிடப்பட்டது அவரது அதிகாரம் குறைக்கப்படுவதைச் சான்றாகக் காட்டுகிறது.
இதனால் நிலவும் முட்டுக்கட்டையை உடைக்க, கட்சியின் தினசரி நிர்வாகம் மற்றும் அமைப்பு சார்ந்த முக்கியப் பணிகளை மற்றொரு மூத்த தலைவரிடம் ஒப்படைக்கும் வகையில், தி.மு.க வரலாற்றிலேயே இல்லாத “இணைப் பொதுசெயலாளர்” என்ற புதிய உயர் பதவியைத் தோற்றுவிக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இளைஞர் அணியினருக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதோடு, மூத்தவர்களின் அனுபவத்தையும் தக்கவைக்கத் தலைமை எடுக்கப்போகும் இந்த முடிவு கட்சி நிர்வாகிகள் மத்தியில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
