LATEST NEWS
“திரையில் தன்னூத்து விவசாயி… நிஜத்தில் ஏன் இந்த கள்ள மௌனம்..?” முதலமைச்சர் விஜய்யை விளாசிய மு.க.ஸ்டாலின்..!!
காவிரி நீர் திறப்பு மற்றும் மேகதாது அணை விவகாரங்கள் தொடர்பாகவும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் போராடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஜூன் 12-இல் வர வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை என்றும், தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சராகத் த.வெ.க. தலைவர் விஜய் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காகத் தமிழக விவசாயிகளின் வாழ்க்கையை அடகு வைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், முழு கடன் தள்ளுபடி என வாக்குறுதி தந்து வெற்றி பெற்றுவிட்டு விவசாயிகளை ஏமாற்றிய ஆட்சியாக த.வெ.க. ஆட்சி நடப்பதாகக் குற்றம்சாட்டினார். மேகதாது அணையை கட்டத் துடிக்கும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் துடிக்கும் முதலமைச்சர், தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட நேரமில்லையா என்றும், விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குக் கொண்டு சென்றால் பாவங்கள் தீர்ந்துவிடுமா என்றும் வினவியுள்ளார்.
திரையில் ‘தன்னூத்து விவசாயி’யாக வேடம் தரித்தவர், நாக்பூரில் தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்குக்கூட கண்டனம் தெரிவிக்காமல் கள்ள மௌனம் காப்பதாகக் கடுமையாக சாடியுள்ளார். மேலும், த.வெ.க. அரசு உடனடியாக வாக்குறுதியளித்தபடி முழு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் மற்றும் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்கத் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
