LATEST NEWS
“எதைக் கொடுக்கிறாயோ அதையே பெறுவாய்..!” பொன்னாடைப் பரிசும்… வைரமுத்து பகிர்ந்த சுவாரசிய தகவலும்..!!
சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியதாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நட்பின் நிமித்தமாக மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றதாகவும், அப்போது அவருக்குப் பொன்னாடை அணிவித்ததாகவும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
அந்நேரத்தில், ஞானபீட விருதின் பெருமையறிந்து தமது இல்லத்திற்கே வந்து வாழ்த்தியதை நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின், வைரமுத்து பெற்றுவந்த விருதுக்காக மீண்டும் ஒரு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். பொன்னாடைக்குப் பொன்னாடை கிடைத்த தருணத்தில், “எதைக் கொடுக்கிறாயோ அதையே பெறுவாய்” என்ற முதுமொழி என் நினைவுக்கு வந்தது என்று குறிப்பிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டதாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து, இருவருமாகச் சேர்ந்து சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை சுமார் முக்கால் மணிநேரம் கண்டுகளித்தபோது, “ஜே.சி.டி பிரபாகர் சட்டமன்றத்தைச் சிறப்பாக நடத்துகிறார்” என்று மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். அதற்கு வைரமுத்து, “சபாநாயகரைச் சமூக ஊடகங்கள் சட்டமன்றத்தின் ஆட்ட நாயகன் என்று பேசுகின்றன” எனக் கூறியதாகவும், அதற்கு ஸ்டாலின் “அப்படியா” என்று கேட்டவாறே ஒரு காஃபி அருந்தி முடித்து, வாழ்த்தி விடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
