LATEST NEWS
“நடிப்புன்னா இதுதான் நடிப்பு..! வடிவேலு பட பாணியில் டிராம..! கோவையில் வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..! கையும் களவுமாகப் பிடித்த இளைஞர்கள்..!!
கோவையில் நடுரோட்டிலும் வீடுகளின் வாசலிலும் வலிப்பு நோய் வந்தது போல் நடித்து, இரக்கப்படும் பொதுமக்களிடம் திட்டமிட்டுப் பணம் பறித்து வந்த பெண் ஒருவரின் லீலைகளை அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து அம்பலப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிவானந்தா காலனி, ரத்தினபுரி, லட்சுமிபுரம் மற்றும் விஸ்வநாதபுரம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில், மர்மப் பெண் ஒருவர் திடீரென வீடுகளின் வாசலிலும் சாலையிலும் விழுந்து, கடுமையான வலிப்பு நோய் வந்தது போல உடலை நடுங்கச் செய்து நாடகமாடியுள்ளார். இதைக் கண்டு பதறிப்போன மக்கள் மனிதாபிமான அடிப்படையில் ஓடிவந்து அவருக்கு முதலுதவி அளித்து, சொந்த ஊருக்குச் செல்லப் பணமில்லாமல் தவிக்கிறாரோ என்று எண்ணி தங்களால் இயன்ற பணத்தைக் கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளனர்.
பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்ற பெண்ணின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால், அப்பகுதி இளைஞர்கள் சிலர் அவரை ரகசியமாகப் பின்தொடர்ந்து கண்காணித்துள்ளனர். அப்போது, அடுத்த தெருவிற்குச் சென்ற அந்தப் பெண், அங்குள்ள மற்றொரு வீட்டின் வாசலிலும் அதேபோல வலிப்பு வந்தது போல் விழுந்து மீண்டும் நாடகமாடிப் பணம் பறிக்க முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் காமெடி பாணியில், தெருத் தெருவாகச் சென்று வலிப்பு நாடகமாடி பணத்தைப் பறிக்கும் தந்திரம் இது என்பதை உணர்ந்த பொதுமக்கள், உடனடியாகத் தங்களது செல்போனில் அந்த நாடகத்தைக் கையும் களவுமாக வீடியோ பதிவு செய்தனர்.
தற்போது அந்தப் பெண் வலிப்பு நோய் வந்தது போல் நடித்து ஏமாற்றும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகித் தீயாகப் பரவி வருகிறது. மனிதாபிமானத்தோடும் இரக்க குணத்தோடும் உதவும் கோவை மக்களின் நல் எண்ணத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பணம் பறிக்கும் இதுபோன்ற ஏமாற்று நபர்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
