LATEST NEWS
9 மாதக் குழந்தையை வன்கொடுமை செய்த 14 வயது சிறுவன் கைது…மொபைல் ஆபாசம் காரணமா?…கோரக்பூர் சம்பவத்தின் பின்னணி…!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில், 14 வயது சிறுவன் ஒருவன் 9 மாத பச்சிளம் பெண் குழந்தையைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பலத்த கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரைச் சேர்ந்த அச்சிறுவன், பாதிக்கப்பட்ட குழந்தையின் உறவினன் (தாய்மாமன்) என்றும், கடந்த சில நாட்களாக அக்குழந்தையின் வீட்டிலேயே தங்கியிருந்தான் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு தாய் அருகில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை நைசாகக் கடத்திச் சென்ற அச்சிறுவன், அருகிலுள்ள வயல்வெளியில் உள்ள ஒரு தகரக் கொட்டகையில் இக்கோரச் செயலை அரங்கேற்றிவிட்டு, குழந்தையை அங்கேயே மயங்கிய நிலையில் போட்டுவிட்டுத் தப்பியோடுள்ளான்.
அதிகாலை 2 மணியளவில் குழந்தை காணாமல் போனதைக் கண்டு பதறிய குடும்பத்தினர் இரவு முழுவதும் தேடியபோது, குற்றம் செய்த அச்சிறுவனும் ஏதும் தெரியாதது போல் அவர்களுடன் சேர்ந்து தேடுவது போல நாடகமாடியுள்ளான். சனிக்கிழமை காலை வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள வயல்வெளியில் உடல் காயங்களுடன் மயங்கிக் கிடந்த குழந்தையை கிராம மக்கள் மீட்டுப் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாகக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைக்குப் பின் உடல்நிலை சீராக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அப்பகுதியின் சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் தீவிர விசாரணையின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் அந்தச் சிறுவனைக் கைது செய்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட அந்தச் சிறுவன் வெள்ளிக்கிழமை இரவு மது அருந்தியிருந்ததும், பச்சிளம் குழந்தையைக் கடத்துவதற்கு முன்பாகத் தனது கைப்பேசியில் தொடர்ந்து ஆபாச வீடியோக்களைப் பார்த்திருந்ததும் மொபைல் ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது. மதுபோதையும், மொபைல் வழி ஆபாசக் காட்சிகளும் ஒரு 14 வயது சிறுவனை இந்த அளவுக்குக் கொடூர மிருகமாக மாற்றியிருப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள நகரக் காவல் கண்காணிப்பாளர் நிமேஷ் பாட்டீல், சிறுவன் விரைவில் சிறார் நீதி வாரியத்தின் (Juvenile Justice Board) முன் ஆஜர்படுத்தப்பட்டு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
