LATEST NEWS
விஜய் அண்ணன் ரசிகையாக இருந்தது ஒரு பாவமா…இரண்டு அமைச்சர்கள் இருந்தும் கிடைக்காத நீதி…கட்சிப் பொறுப்பாளர் சரவணன் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு… தூத்துக்குடியை உலுக்கிய பரபரப்பு வாக்குமூலம்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண் ஒருவரைத் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் தவெக நிர்வாகிகள் இருவரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து தமக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்தும், இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்கள் குறித்தும் கண்ணீர் மல்க விவரித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பெண், தான் 1997 முதல் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து கட்சிப் பணியாற்றி வந்ததாகக் குறிப்பிட்டார். ஸ்ரீவைகுண்டம் தவெக பொறுப்பாளர் சரவணன் என்பவரின் வழிகாட்டுதலின்படி, வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி பாலா என்பவரால் தான் ராமநாதபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறினார். காரில் செல்லும் வழியில் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து, தவெக நிர்வாகிகள் இருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுகுறித்து வெளியில் கூறினால் குழந்தையைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் அழுதுகொண்டே தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து தவெக பொறுப்பாளர் சரவணனிடம் முறையிட்டபோது, “இதை பெரிதுபடுத்த வேண்டாம், புஸ்ஸி ஆனந்த் மூலம் விஜய் அண்ணனிடம் பேசி வேலை வாங்கித் தந்து சரிசெய்துவிடலாம்” என்று அவர் தொலைபேசியில் சமரசம் பேச முயன்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பாதிக்கப்பட்ட தனக்கு தவெக தரப்பிலிருந்து எந்தவொரு ஆறுதலும் ஆதரவும் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்த அந்தப் பெண், குற்றவாளிகள் இருவருக்கும் தவெக பொறுப்பாளர் சரவணனின் பங்களாவில்தான் புகலிடம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோரிடமும், மாவட்ட அமைச்சர்களிடமும் இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார். “விஜய் ரசிகையாக இருந்த பாவத்திற்கு எனக்கு இந்த நிலையா? ‘தெறி’ திரைப்படத்தில் வருவது போல குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று கூறிய அவர், தமிழக முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, தனக்கும் தன்னைப் போல பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணுக்கும் உரிய நீதி பெற்றுத் தர வேண்டும் என்றும், தவெக பொறுப்பாளர் சரவணன் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
