CRIME
உங்க அப்பா கூட்டிட்டு வர சொன்னாரு… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..! மிருகமாக மாறிய பக்கத்து வீட்டுக்காரன்..! நர்சிங்பூர் படுகொலை சம்பவத்தின் பகீர் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம் கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் பள்ளியிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5 அன்று பள்ளியிலிருந்து வீடு திரும்ப இருந்த சிறுமியிடம், அவளது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அனில் யாதவ் என்பவர், “உன் தந்தை உன்னை வரச் சொன்னார்” என்று பொய் கூறி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுமி நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஜௌதேஷ்வர் காவல் சௌகியில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் மோப்ப நாய், FSL குழு மற்றும் தொழில்நுட்பக் கண்காணிப்பு உதவியுடன் சுமார் 8 மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கிராமத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில், நீரால் நிரம்பிய ஒரு குழியில் சிறுமியின் உடலைக் கைப்பற்றினர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அனில் யாதவ், சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும், சிறுமி அலறியதால் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் தொண்டையை நெரித்துக் கொன்றதாகவும் ஒப்புக்கொண்டான். மேலும், கொடூரத்தைச் செய்த பிறகு எவ்வித சந்தேகமும் வராதவாறு கிராம மக்களுடன் சேர்ந்து சிறுமியைத் தேடுவது போல் நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமானது.
இச்சம்பவத்தைக் கண்டித்து கோடேகாவ் பகுதி முழுமையாக அடைக்கப்பட்டு, பொதுமக்கள் மெழுகுவர்த்தி பேரணி நடத்தி குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் குற்றவாளி அனில் யாதவ் மீது போக்சோ சட்டம், கற்பழிப்பு மற்றும் கொலை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இக்கொடூர குற்றத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று குற்றவாளிக்கு விரைவாகக் கடுமையான தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
