CRIME
ஐயோ கொடுமையே…! டிராக்டரைத் திருட வந்ததாகச் சந்தேகம்… தொழிலாளியை மரத்தில் கட்டி வைத்துக் கொடூரமாக அடித்துக் கொன்ற முதலாளி…! வாரணாசியில் நடந்த பகீர் சம்பவம்..!!
வாரணாசியின் சோலாபூர் மற்றும் சௌபேபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 45 வயதான ராம் ஜனம வனவாசி என்ற தொழிலாளி கொடூரமாகக் கொல்லப்பட்டார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர். ஆகஸ்ட் 20 ஆம் தேதி இரவு, செங்கல் சூளை உரிமையாளரான அஜய் சிங் மற்றும் அவரது கூட்டாளி விஷால் சிங் ஆகியோருக்கு ராம் ஜனம வனவாசி மீது டிராக்டரைத் திருட வந்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்தது. இந்த சந்தேகத்தின் பேரில், அவரைப் பிடித்துச் சென்று ஒரு மரத்தில் கயிற்றால் கட்டிவைத்து, மரக்கட்டைகள் மற்றும் லத்திகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலை சோலாபூர் பகுதியில் உள்ள கோசாய்பூர் எனும் இடத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
ஆகஸ்ட் 21 ஆம் தேதி சோலாபூர் காவல்துறையினர் ஒருவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். அது ராம் ஜனம வனவாசி என்பதும், அவர் சந்திகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஆரம்பத்தில் புகார் எதுவும் வராததால் வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், தொழிலாளியை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக அடிக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கின. இந்த வீடியோ ஆதாரத்தைக் கண்ட காவல்துறையினர் உடனடியாக விழித்துக்கொண்டு, வழக்கைக் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தனர்.
வைரலான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தாரிடம் இருந்து காவல் துறையினர் புகார் மனுவைப் பெற்றனர். அதன்பேரில், செங்கல் சூளை உரிமையாளர் அஜய் சிங் மற்றும் விஷால் சிங் ஆகிய இருவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 103(1)-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சௌபேபூரின் ஹரியாதி கிராமத்தில் மறைந்திருந்த முதன்மை குற்றவாளி அஜய் சிங் மற்றும் விஷால் சிங் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட லத்திகளையும் பறிமுதல் செய்துள்ள காவல்துறை, இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகிறது.
