LATEST NEWS
இவங்க திருந்தவே மாட்டாங்களா…? இலவசமாக கிடைத்தால் எதையும் சாப்பிடுவதா…? குப்பையில் கிடந்த சாக்லேட்டுகளை பைகளில் அள்ளிச் சென்ற கூட்டம்… நெட்டிசன்களை கொதித்தெழ வைத்த பகீர் காட்சி..!!
கான்பூரின் பாங்கி தொழில்பேட்டை பகுதியில் காலாவதியான சாக்லேட்டுகள் மற்றும் மிட்டாய்களை அள்ளுவதற்காக ஏராளமான மக்கள் திரண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து காலாவதியான சாக்லேட்டுகள் வீதியோரக் குப்பை கொட்டும் இடத்தில் கொட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், பை, சாக்கு மற்றும் அட்டைப் பெட்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குப்பையில் கிடந்த சாக்லேட்டுகளை போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் உணவுப் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மை குறித்த தீவிரக் கவலைகளை எழுப்பியுள்ளது. உள்ளூர் தகவல்களின்படி, இந்த சாக்லேட்டுகள் 2024-ஆம் ஆண்டிலேயே காலாவதியானவை என்று சிலர் கூறுகின்றனர்; இருப்பினும், அதிகாரிகள் இதனை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. சாக்லேட்டுகளை அள்ளிச் சென்றவர்கள் அவற்றை சொந்தப் பயன்பாட்டிற்கு எடுத்துச் சென்றார்களா அல்லது மீண்டும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. காலாவதியான மற்றும் திறந்தவெளியில் குப்பையோடு கொட்டப்பட்ட உணவுகளை உட்கொள்வது கடுமையான சுகாதாரக் கேட்டை விளைவிக்கும்.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிகளின்படி, காலாவதியான மற்றும் நிராகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக அழிக்கப்பட வேண்டும். மக்கள் இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காகக் காலாவதியான உணவுப் பொருட்களைச் சேகரிப்பது அவர்களின் அறியாமையைக் காட்டுவதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது. பாக்கெட்டில் பார்க்க நன்றாக இருந்தாலும், காலாவதியான உணவுகளை உண்பது ஆபத்தானது என்பதால், பொதுமக்கள் இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
