CRIME
“அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் ஆசிட் வீச்சு” ஊத்துக்கோட்டை ஏரிக்கரையில் பெண் சடலம் மீட்பு.. 7.41 மணிக்கு நடந்தது என்ன..? நள்ளிரவு போன் காலில் சிக்கிய க்ளூ..!!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொட்டாரெட்டிகுப்பம் பகுதியின் வெள்ளாகுளம் ஏரிக்கரையில், சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் முகம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை அந்த வழியாகச் சென்ற கிராமத்து இளைஞர் ஒருவர் சடலத்தைப் பார்த்து கொடுத்த தகவலின் பேரில், ஊத்துக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். முதற்கட்ட ஆய்வில், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அப்பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கொலை நடந்த ஏரிக்கரைப் பகுதி இரவு நேரங்களில் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக இருந்துள்ளது. போலீசார் சம்பவ இடத்தில் இருந்து ஒரு செல்போனைக் கைப்பற்றியுள்ளனர். நேற்று இரவு 7.41 மணியளவில் அந்தப் பகுதியில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு சென்றிருப்பதைக் கண்டறிந்த போலீசார், அந்த அழைப்புக்கும் இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஊத்துக்கோட்டை டிஎஸ்பி வினோத் மற்றும் ஆய்வாளர் தேவராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள், கைப்பற்றப்பட்ட செல்போன் தரவுகள் மற்றும் அந்த வழியாகச் சென்ற வாகனங்களின் விவரங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சமீபகாலமாக அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
