CRIME
பரபரப்பு..! ரூ. 60 கோடி சுருட்டல்… சிறுவர்கள் பெயரிலும் மோசடி..! பி.எம். கிசான் திட்டத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..! லாக்-இன் வசதியை நீக்கி தீவிர விசாரணை..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தகுதியான விவசாயிகள் பயனடைவதற்காக மத்திய அரசால் செயல்படும் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி’ திட்டத்தில், ரூபாய் 60 கோடிக்கும் அதிகமான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் இந்த திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, வேளாண்மைத் துறை துணை இயக்குநர் அஷ்வினி குமார் சிங் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுவாக, பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் மொபைல் போன் அல்லது மக்கள் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்த பின், தாலுகா, மாவட்டம், மாநிலம் மற்றும் மத்திய அரசு நிலைகளில் முறையான சரிபார்ப்புகள் முடிவடைந்த பிறகே நிதியுதவி வழங்கப்படும். ஆனால், உத்தரப் பிரதேசத்தின் குண்டா தாலுகாவில் வழக்கமான முறையில் பதிவு செய்ய முடியாத தகுதியான விவசாயிகளுக்காக ‘நேரடி நுழைவு’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சிறப்பு வசதியை தவறாகப் பயன்படுத்தி, வழக்கமான சரிபார்ப்பு நடைமுறைகளைத் தவிர்த்து நேரடியாக மத்திய அரசுக்கு விண்ணப்பங்களை அனுப்பி மோசடி செய்யப்பட்டுள்ளது.
இப்பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சுமார் 3.18 லட்சத்திற்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான பதிவுகள் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது. இதில் பதிவு செய்திருந்த பல பயனாளிகள் சிறார்கள் என்றும், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லாமல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள் என்றும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் தீபக் பூக்கர் தலைமையிலான சைபர் காவல் துறையினர் 1,700-க்கும் மேற்பட்ட ஐ.பி முகவரிகள் மற்றும் போலி பயனாளிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், இணையதளத்தில் இருந்து அந்த நேரடி நுழைவு வசதியும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
