LATEST NEWS
உனக்கு ஆயுசு ரொம்ப கெட்டிப்பா…! மின் கம்பியில் படுத்து வித்தை காட்டிய வாலிபர்… அந்தரத்தில் தண்டால் வேற…. நெட்டிசன்களை உலுக்கிய வைரல் சம்பவம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் மகராஜ் கஞ்ச் பகுதியில் மதுபோதையில் தள்ளாடியபடி வந்த நபர் ஒருவர், அங்கிருந்த ஒரு மின்சாரக் கம்பத்தின் மீது மளமளவென ஏறியுள்ளார். அதன் உச்சியில் 11 கே.வி. மின்சாரம் பாயும் ஆபத்தான உயர்அழுத்தக் கம்பிகள் செல்வதைக் கண்ட பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்குத் தகவல் கொடுத்து அந்தப் பகுதிக்கான மின் இணைப்பைத் துண்டிக்கச் செய்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட போதிலும், போதையில் இருந்த அந்த வாலிபர் மின் கம்பிகளுக்கு இடையே தலை மற்றும் கால்களை நீட்டி, படுக்கை போல மாற்றி மிகச் சாதாரணமாகப் படுத்துக் கொண்டு அட்டகாசம் செய்துள்ளார்.
மின் கம்பி மீது படுத்துக் கொண்டே புரள்வது, கால்களை மேலே தூக்கி யோகாசனம் செய்வது, கைகளை ஊன்றி தண்டால் எடுப்பது என அவர் செய்த ஆபத்தான சேட்டைகள் அங்கிருந்தவர்களை உறைய வைத்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் மின்சார ஊழியர்கள் இணைந்து அந்த வாலிபரை லாவகமாக மீட்டு கீழே இறக்கினர்.
கீழே இறக்கப்பட்ட வாலிபரின் அதிர்ஷ்டத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் திட்டித் தீர்த்துவிட்டுச் சென்றனர். இதற்கிடையே, அந்த வாலிபர் அந்தரத்தில் மின்கம்பியில் செய்த விபரீத சாகசங்களை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்ய, அது தற்போது இணையதளங்களில் படுவேகமாகப் பரவி வருகிறது.
