LATEST NEWS
ஈரான் போட்ட முட்டுக்கட்டை…! ஹார்முஸ் நீரிணையில் சிங்கப்பூர் கப்பல் மீது அதிரடித் தாக்குதல்… கட்டண விவகாரத்தால் வெடித்த புதுப் பிரச்சனை… அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தைக்கு நடுவே அரங்கேறிய பகீர் சம்பவம்…!!
உலக அளவில் மிக முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையாகத் திகழும் ஹார்முஸ் நீரிணையில், கப்பல் போக்குவரத்தை விரைவுபடுத்த அமெரிக்காவின் ஆதரவோடு ஓமான் நாடு கொண்டு வந்த மாற்று வழித்தடத் திட்டத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. தங்களது இறையாண்மையையும் கட்டுப்பாட்டையும் தவிர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பாதையைப் பயன்படுத்தும் சர்வதேசக் கப்பல்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், ஈரானின் அனுமதியின்றி ஓமான் வழித்தடத்தில் பயணித்த சிங்கப்பூர் கொடி ஏற்றிய சரக்குக் கப்பல் மீது ஈரான் படைகள் அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அந்தக் கப்பல் ஓமான் கடற்கரையிலிருந்து 7.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் தரைதட்டி நிற்கிறது.
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களும் தங்களால் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், ‘Channel 16’ அலைவரிசை மூலம் தங்களோடு தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் ஈரான் கட்டாயப்படுத்தியுள்ளது. தங்களின் ஒப்புதல் இல்லாமல் மாற்றுப் பாதைகளில் செல்லும் கப்பல்கள் கண்டிப்பாக முடக்கப்படும் என ஈரான் பிடிவாதம் காட்டுவதால், இப்பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், ஓமான் நாட்டின் புதிய வழித்தடத்தால் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய டோல் கட்டண வருவாய் பாதிக்கப்படும் என்ற பொருளாதாரக் காரணத்தினாலேயே ஈரான் இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
