LATEST NEWS
“சாப்பாட்டில் விஷம் வச்சும் சாகல” கொஞ்சம் அசந்த நேரம் பார்த்து காதில் விஷம் ஊற்றிய மனைவி.. கோவிலுக்குள் கதறியபடி ஓடிய கணவன்… 10 லட்சம் கடனுக்கு இப்படியா..? தஞ்சாவூரில் அதிர்ச்சி..!!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புழுதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய கூலித் தொழிலாளி ரவிச்சந்திரன் என்பவருக்கும், உமாராணி என்பவருக்கும் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகளும் மகனும் உள்ளனர். ரவிச்சந்திரன் தனது குடும்பத்திற்காகப் புதிதாக வீடு கட்டியதில் அவரது பெயரில் சுமார் ரூ. 10 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பில் இருந்து தப்பிக்க நினைத்த உமாராணி, கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுத் தனது தம்பி ஞானசேகரனுடன் சேர்ந்து 3 மாதங்களுக்கு முன்பே உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதிலிருந்து ரவிச்சந்திரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதால், அதன் பின்னர் வீட்டில் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்த்து வெளியில் சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் வெளியில் சாப்பிட்டுவிட்டு ரவிச்சந்திரன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை உமாராணியும் அவரது தம்பி ஞானசேகரனும் சேர்ந்து ரவிச்சந்திரனின் காதில் விஷத்தை ஊற்றியுள்ளனர். காதில் ஏற்பட்ட பயங்கர எரிச்சலால் தூக்கம் கலைந்து விழித்த ரவிச்சந்திரன், மனைவியைத் தள்ளிவிட்டு வீட்டிலிருந்து தப்பியோடி, அதிகாலை இருட்டில் அருகில் உள்ள ஒரு கோவிலில் தஞ்சமடைந்து விடியும் வரை காத்திருந்தார். விடிந்த பிறகு அந்த வழியாகச் சென்ற ஒருவரின் உதவியுடன், காதில் திரவம் ஊற்றப்பட்டதை உறுதி செய்து கொண்டு கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரவிச்சந்திரனிடம் திருவிடைமருதூர் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி அவரது புகாரைப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில், கணவரைக் கொலை செய்ய முயன்ற மனைவி உமாராணி மற்றும் அவரது தம்பி ஞானசேகரன் ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ. 10 லட்சம் கடன் விவகாரம் மட்டுமே இந்த கொடூரக் கொலை முயற்சிக்குக் காரணமா அல்லது இதன் பின்னணியில் கள்ளக்காதல் அல்லது வேறு ஏதேனும் சொத்துப் பிரச்சினைகள் போன்ற மறைமுகக் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
