LATEST NEWS
நோட்டுக்கு நோ… ஒன்லி காயின்ஸ்..! மூட்டை மூட்டையாக சில்லறையைக் கொட்டி பைக் வாங்கிய ‘நாணயக்கார’ மனிதர்..!!!
தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள ஸ்பிளெண்டர் பிளஸ் மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக, முழுக்க முழுக்க 10 ரூபாய் நாணயங்களை மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்து கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
ராமகிருஷ்ணா என்ற அந்த நபர், மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நீண்ட நாட்களாக 10 ரூபாய் நாணயங்களைச் சேமித்து வந்துள்ளார். மொத்தம் ரூ.1,10,000 தொகையைச் செலுத்த, அவர் சுமார் 11,000 பத்து ரூபாய் நாணயங்களை சாக்கு மூட்டைகளில் நிரப்பி இருசக்கர வாகன ஷோரூமிற்கு எடுத்துச் சென்றுள்ளார். சந்தையில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று பரவும் வதந்திகளை முறியடிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே தான் இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஷோரூம் ஊழியர்கள் முதலில் இந்த நாணயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தாலும், வாடிக்கையாளரின் விருப்பத்தை ஏற்று அவற்றை எண்ணத் தொடங்கினர். ஊழியர்கள் அனைவரும் ஒன்று கூடி பல மணி நேரம் செலவழித்து அந்த 11,000 நாணயங்களையும் பொறுமையாக எண்ணி முடித்தனர். பணம் சரியாக இருந்ததை அடுத்து, ராமகிருஷ்ணாவிடம் புத்தம் புதிய ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அவரது இந்த வித்தியாசமான முயற்சி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
