LATEST NEWS
IAS ஆவதா? சிறந்த தாயாவதா? மேடையில் கொளுத்திப் போட்ட கவர்னர்.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!
உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் மாணவிகளிடையே ஆற்றிய உரை ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது. கல்வி பயிலும் பெண்கள், ஐஏஎஸ் அதிகாரியாகவோ அல்லது ஆசிரியராகவோ வருவதற்கு முன்னதாக, முதலில் ஒரு சிறந்த தாயாக உருவெடுப்பதே மிகவும் முக்கியம் என்று அவர் கூறியுள்ளார். கான்பூரில் நடைபெற்ற பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசும்போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். ஆளுநரின் இந்த பேச்சு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, பல விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
பெண்கள் திருமணத்திற்குப் பிறகும் தங்களின் கல்வியைக் கைவிடாமல் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதை அவர் தனது உரையில் வலியுறுத்தினார். மேலும், சமூகத்தில் நன்னெறிகள் குறைந்து வருவதன் காரணமாகவே குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதாகத் தனது ஆழ்ந்த கவலையையும் அவர் வெளிப்படுத்தினார். ஆளுநரின் இந்த கருத்திற்குச் சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் பெரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் தங்களின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
