CRIME
கல்யாண மண்டப வாசலில் அரங்கேறிய இரட்டைக் கொலை.. கண் இமைக்கும் நேரத்தில் வெட்டிச் சாய்த்த கும்பல்.. ஆந்திராவில் நடுங்க வைத்த சம்பவம்..!!
ஆந்திர மாநிலம் திருப்பதி ஜீவகோனா பகுதியைச் சேர்ந்த முனிரத்னம் ரெட்டி மற்றும் சுப்பாரெட்டி நகரைச் சேர்ந்த மணிகண்டா ஆகிய இருவரும், திருமலையில் பணிபுரியும் சம்பூர்ணம்மா என்பவரின் குடும்பப் பிரச்சினையில் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்துள்ளனர். பிரிந்து வாழும் சம்பூர்ணம்மாவின் மகள் மற்றும் மருமகன் சுனிலுக்கு இடையே சமாதானம் பேச இவர்கள் முயன்றபோது, சுனில் இவர்களிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், திருச்சானூர் சாலையில் உள்ள பத்மாவதி கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்குச் சுனில் வந்திருப்பதை அறிந்து, முனிரத்னம் ரெட்டியும் மணிகண்டாவும் அங்கு சென்று அவரிடம் பேசியுள்ளனர். அப்போது இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த சுனில் மற்றும் அவரது தரப்பினர் மறைத்து வைத்திருந்த கத்திகளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் முனிரத்னம் ரெட்டி சம்பவ இடத்திலும், மணிகண்டா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிழக்கு துணைக் காவல் கண்காணிப்பாளர் பக்தவத்சலம் மற்றும் போலீசார், உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு மற்றும் திருமண விவகாரமே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணம் என்பதும், கொலையாளிகள் ஏர்பேடு மண்டலம் ஜங்காலபல்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது. சம்பவ இடத்துச் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், திருப்பதி நகரின் எல்லைகளை உடனடியாக மூடி நடத்திய தீவிர வாகன சோதனையில், தப்பியோட முயன்ற முதன்மைக் குற்றவாளி சுனில் மற்றும் அவரது உறவினர்களை அதிரடியாகக் கைது செய்தனர். கல்யாண மண்டபம் அருகே கண் இமைக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் மற்றும் அது தொடர்பான கொடூரத் தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
