LATEST NEWS
ரூ.1,200 கோடி எத்தனால் அரிசி ஊழல்…! ம.பியில் வெடித்த மெகா சர்ச்சை…அடுத்தடுத்து சிக்கும் பாஜக…! மோடி-அமித் ஷாவை அட்டாக் செய்த கார்கே..!!
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் எத்தனால் தயாரிப்பிற்காக ஒதுக்கப்பட்ட அரிசி, தனியார் ஆலைகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய உணவுக்கழகம் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்ட இந்த அரிசி, தனியார் ஆலைகளில் மறுசுழற்சி செய்யப்பட்டு, மீண்டும் சுழற்சி முறையில் அரசு கிடங்குகளுக்கே விற்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்க அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான அரசு தற்போது சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சாடியுள்ள மல்லிகார்ஜுன கார்கே, எத்தனால் என்ற பெயரில் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் இளம் பெண்களின் ஆரோக்கியத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய அரிசி, அரிசி ஆலை அதிபர்கள் மற்றும் எத்தனால் மாஃபியாக்களின் லாப வெறிக்காக, பாஜக அரசின் ஆதரவோடு திசைதிருப்பப்பட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மத்திய பிரதேசம் பாஜகவின் ஊழல் மற்றும் கொள்ளையின் மையப்புள்ளியாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட கார்கே, உஜ்ஜைன் நகரில் அரசின் உள்கட்டமைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்கள் அமையவிருந்த பகுதிகளில் முதலமைச்சரின் உறவினர்கள் பெயரில் பெருமளவில் நிலங்கள் வாங்கப்பட்ட நில விரிவாக்க முறைகேட்டையும் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தனை ஊழல்கள் நடந்தும் பிரதமர் மோடி எப்போதும் போல இந்த விவகாரத்திலும் ஆழ்ந்த மௌனம் காக்கிறார் என்றும், மோடி-அமித் ஷா ஜோடி தங்களது அதிகார திமிரால் பொது வாழ்வின் பொறுப்புக்கூறலையே மிதித்துத் துவம்சம் செய்துவிட்டனர் என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
