LATEST NEWS
பொதுப் பெட்டி இல்லையா? அப்போ அது என்ன பெட்டி? ஓடும் ரயிலில் நடந்த பூஜை வீடியோ… ரயிலில் பரபரப்பு…!!
சமீபத்தில் ஓடும் ரயிலில் பக்தர்கள் பஜனை பாடியபடி பூஜை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வெள்ளை ஆடை அணிந்தபடி சிலர் ரயிலின் தரையில் அமர்ந்து இந்த வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். பொதுப் போக்குவரத்தில் இதுபோன்று செயல்படலாமா என இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கிய நிலையில், இந்த விவகாரம் குறித்து வடக்கு ரயில்வே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் உரிய விளக்கத்தை அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், இந்தப் பூஜை நடைபெற்றது சாதாரண பயணிகள் பெட்டியில் அல்ல என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மாறாக, அது ஐஆர்சிடிசி மூலமாக வாடகைக்கு எடுக்கப்பட்ட ‘சலூன் கார்’ எனப்படும் அதிநவீன சொகுசுப் பெட்டியாகும். ஒரு முழுமையான வீட்டைப் போலவே குளிரூட்டப்பட்ட படுக்கையறைகள், சமையற்கூடம், ஓய்வறை மற்றும் கழிப்பறை போன்ற அனைத்து சொகுசு வசதிகளையும் கொண்ட இந்தச் சிறப்புப் பெட்டியை, உரியக் கட்டணம் செலுத்தி யார் வேண்டுமானாலும் தங்களின் தனிப்பட்ட பயணங்களுக்காகப் பதிவு செய்துகொள்ளலாம் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட பயணத்திற்காக, கடந்த ஜூலை 8ஆம் தேதியன்று நபர் ஒருவர் ரூ.3,08,580-ஐ முன்பணமாகச் செலுத்தி இந்தச் சொகுசுப் பெட்டியைப் பதிவு செய்துள்ளார். அதன்படி, ஜூலை 10ஆம் தேதி டெல்லியில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற பஸ்சிம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்தப் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. முழு கட்டணமும் செலுத்தித் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட இடம் என்பதால், அதில் அவர்கள் தங்களது சொந்த மத வழிபாடுகளை மேற்கொண்டதில் எந்தவொரு விதிமீறலும் இல்லை என ரயில்வே நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்து, இந்த இணையச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
