LATEST NEWS
“அரசு வேலை கிடைத்தவுடன்.. 20 ஆண்டு கால மனைவியை மறுத்த ஆசிரியர்…! கோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!”
ஜார்கண்ட் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் ஒருவருக்கும், ஒரு பெண்ணுக்கும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் இவர்களது வாழ்க்கை சாதாரணமாகச் சென்றது. ஆனால், கணவருக்கு அவரது அண்ணி உடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகக் கூறி குடும்பத்தில் தகராறு வெடித்தது. ஊர்ப் பஞ்சாயத்துகள் மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் கிடைக்காத நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு அந்தப் பெண் கணவர் வீட்டிலிருந்து விரட்டப்பட்டார். இருப்பினும், விவாகரத்து கேட்காத அந்தப் பெண், தனது குடும்பம் மீண்டும் ஒன்றுபட வேண்டும் என்பதற்காகத் திருமண உரிமைகளை மீட்டெடுத்துத் தரும்படி குடும்ப நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அந்த அரசு ஆசிரியர் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிமன்ற விசாரணையின் போது, தனக்குத் திருமணம் நடந்ததையே முற்றிலும் மறுத்த அவர், அது ஒரு போலித் திருமணம் என்று வாதாடினார். தனக்கு அரசு வேலை கிடைத்த பிறகு, கிராமத்தில் உள்ள சிலர் தன்னிடம் பணம் பறிப்பதற்காகவும், தன்னை மிரட்டுவதற்காகவும் சதி செய்து இந்தத் திருமண நாடகத்தை ஆடியுள்ளதாகக் கூறினார். அந்தப் பெண் தன் மனைவியே இல்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இந்த வழக்கினை விசாரித்த ஜார்கண்ட் உயர் நீதிமன்றம், கணவரின் வாதங்களை முழுமையாக நிராகரித்தது. பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ள வாக்காளர் பட்டியல், ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு ஆவணங்களில் அந்தப் பெண்ணின் கணவர் பெயராக இந்த ஆசிரியரின் பெயரே இருப்பதையும், இருவரும் நீண்ட காலம் கணவன்-மனைவியாக வாழ்ந்ததற்குப் பல சாட்சியங்கள் இருப்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த அரசு ஆவணங்களை தவறு என நிரூபிக்க கணவர் தரப்பில் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, முறையான காரணமின்றி மனைவியைப் பிரிந்து வாழ்ந்த அந்த ஆசிரியரின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.
