LATEST NEWS
“டமருகம் முழங்கிய சில நொடிகளில் மாரடைப்பு… கோவில் பூசாரியின் கடைசி நிமிடங்கள்..! ராஞ்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!”
சார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் உள்ள இந்திரபுரி பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் ஒன்றில், மாலை நேர ஆர்த்தியின் போது கோவில் பூசாரி மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பூசாரியின் பெயர் ஆச்சார்யா ரஜினிகாந்த் மிஸ்ரா ஆகும். இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை கோவிலில் வழக்கம்போல இறை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாரடைப்பு ஏற்படுவதற்கு சில நொடிகள் முன்பு வரை, பூசாரி ரஜினிகாந்த் மிஸ்ரா முழுமையான பக்தி பரவசத்துடன் காணப்பட்டார். அவர் கைகளில் ஆர்த்தி தட்டை ஏந்தி, சங்கு மற்றும் டமருகத்தை முழங்கியபடி இறைவனுக்கு மாலை நேர ஆர்த்தியை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு, அங்கிருந்த பக்தர்கள் கண் முன்னே திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
அந்த சமயத்தில் ஜார்கண்ட் மாநில பாஜக செயற்குழு உறுப்பினரான ரமேஷ் சிங் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் சிலர் கோவிலில் இருந்தனர். அவர்கள் உடனடியாக பூசாரியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். கடவுளுக்கு ஆர்த்தி செய்து கொண்டிருந்த போதே பூசாரி உயிரிழந்த இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் ராஞ்சி முழுவதும் தற்பொழுது பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
