LATEST NEWS
“இனிமே போராட்டத்துக்கு வந்தா… வாழ்க்கையவே அழிச்சிருவேன்..!” போலி போதைப்பொருள் வழக்கு போடுவதாக மாணவர்களுக்கு மிரட்டல்… சிக்கிய காவலர் பணிநீக்கம்..!!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து மும்பையின் சிவாஜி பார்க், செம்பூர் மற்றும் ஆசாத் மைதானம் போன்ற இடங்களில் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அப்போது கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் அடைக்கப்பட்டிருந்த மாணவர்களிடம், “மீண்டும் போராட்டத்திற்கு வந்தால் உங்கள் பைகளில் 50 கிராம் போதைப்பவுடரைப் போட்டு வாழ்க்கையை அழித்துவிடுவேன்” என காவலர் ஒருவர் போலி போதைப்பொருள் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டும் வீடியோ இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, மும்பை காவல்துறை இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டது. இதில் மிரட்டல் விடுத்த காவலர், சியான் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் பவன் சங்லே என அடையாளம் காணப்பட்டார். துறைசார் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அவர் உடனடியாகத் தற்போதைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளையில், மாணவர் போராட்டங்களைக் கட்டுப்படுத்த காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். போராட்டத்தில் மீண்டும் பங்கேற்பதைத் தடுக்க, காவல் நிலையங்களில் இருந்து நேரடியாக அழைப்புகள் விடுக்கப்படுவதாகவும், வாட்ஸ்அப் மூலம் மாணவர்கள் தங்களுடைய நேரலை இருப்பிடத்தைப் பகிருமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகவும், டிஜிட்டல் முறையில் நோட்டீஸ்கள் அனுப்பப்படுவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
