LATEST NEWS
திக் திக் திக்… 50,000 அடி உயரத்திற்கு எழும்பிய சாம்பல் மேகங்கள்..! 430 பேரை பலிவாங்கிய ‘அனக் கிரகடாவ்’ மீண்டும் வெடித்துச் சிதறியது… ஸ்தம்பித்த 301 விமானங்கள்..!!
இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள சுண்டா ஜலசந்தி பகுதியில் ‘அனக் கிரகடாவ்’ என்ற எரிமலை அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை முதல் லேசான அதிர்வுகள் பதிவாகி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:53 மணிக்கு இந்த எரிமலை வெடித்துச் சிதறியது. செயற்கைக்கோள் படங்களின்படி, எரிமலையிலிருந்து 20,000 அடி மற்றும் 50,000 அடி உயரத்திற்கு இரு மாபெரும் சாம்பல் மேகங்கள் எழும்பி ஜகார்த்தா, லம்பங் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்குப் பரவின. குடியிருப்பு பகுதிகள் 16 கி.மீ தொலைவில் உள்ளதால் உடனடி உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், எரிமலையிலிருந்து 3 கி.மீ சுற்றளவுக்குச் செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாம்பல் மேகங்கள் காரணமாகத் தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட 6 முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் 58 சர்வதேசச் சேவைகள் உட்பட மொத்தம் 301 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஜகார்த்தாவின் முக்கிய சர்வதேச விமான நிலையமான ‘சுகர்னோ-ஹட்டா’ அதிகாலை 5:30 மணி முதல் மூடப்பட்டது. இதன் காரணமாகச் சிங்கப்பூர், ஹாங்காங், சிட்னி, ஆம்ஸ்டர்டாம், சியோல், தோஹா, கோலாலம்பூர் போன்ற நகரங்களுக்கான சர்வதேசச் சேவைகளும், பாலி, சுராபயா போன்ற உள்நாட்டுச் சேவைகளும் பாதிக்கப்பட்டு, ஒரே நாளில் சுமார் 22,800 பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
‘கிரகடாவ்வின் குழந்தை’ என்று அழைக்கப்படும் இந்த எரிமலை, 1883-ல் ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெடிப்பிற்குப் பிறகு, 1927 ஆம் ஆண்டில் கடலுக்கு அடியில் இருந்து புதிதாக உருவாகத் தொடங்கியது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்த எரிமலை வெடித்தபோது, அதன் ஒரு பகுதி கடலுக்குள் சரிந்து விழுந்ததால் பயங்கர சுனாமி ஏற்பட்டு 430க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அன்றிலிருந்து இன்றுவரை இந்த எரிமலை அந்நாட்டின் 2-வது மிக ஆபத்தான பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர் வெடிப்புகளின் காரணமாக இந்த எரிமலையின் அளவு அதன் ஆரம்ப அளவிலிருந்து கால் பங்காகக் குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
