CRIME
“கதவைத் திறடா…” புகையை ஊதி, காரைத் தட்டி ரகளை… ஹார்ன் அடித்ததற்காக நடுரோட்டில் மலையாளி குடும்பத்துக்கு நடந்த கொடுமை… கொச்சியில் தனியார் பேருந்து ஊழியரின் அராஜகம்..!!
ஆகஸ்ட் 9-ஆம் தேதி பிற்பகல் கொச்சி கலூரில் உள்ள தேசபிகாமனி சந்திப்பு மேம்பாலத்திற்கு அருகில் இச்சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தில் 21 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் மலையாளி ஷாஜி ஜோசப் என்பவர் தனது குடும்பத்தினருடன் இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் முன்னால் சென்ற ஒரு தனியார் பேருந்து திடீரென காரை முந்திச் சென்று, பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக நடுரோட்டிலேயே நின்றது. இதனால் காரை ஓட்டிவந்த ஷாஜி ஹார்ன் அடித்து தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த முகமது அன்சார் என்ற பேருந்து கிளீனர், பேருந்திலிருந்து கீழே இறங்கி காரை மறித்து நின்றார். மேலும் புகையிலை சிகரெட் புகைத்தபடியே காரின் கதவைத் திறக்க முயன்றும், காரின் பொன்னட் மற்றும் விண்ட்ஷீல்டு கண்ணாடியைத் தட்டியும், கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
காரில் இருந்த குடும்பத்தினர் அச்சமடைந்து காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர். இந்தத் தகராறால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்த மற்ற வாகன ஓட்டிகள் தலையிட்டு நிலையைச் சரிசெய்தனர். காரின் உள்ளிருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, தனியார் பேருந்து ஊழியர்களின் இத்தகைய அராஜகமான நடத்தையைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட பேருந்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
தனது விடுமுறை முடிந்து இங்கிலாந்து திரும்ப வேண்டி இருந்ததால், ஷாஜி ஜோசப் இ-மெயில் மூலமாக காவல்துறையிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் டவுன் நார்த் காவல் நிலைய போலீசார் குற்றஞ்சாட்டப்பட்ட முகமது அன்சாரைக் கைது செய்ய அவரது வீட்டிற்குச் சென்றனர். அப்போது அவர் காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு போலீஸ் அதிகாரியைத் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், காவல்துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
