LATEST NEWS
“மக்களை கொல்ல விரும்பவில்லை.. ஒப்பந்தம் தான் வேணும்..!” டிரம்ப் அதிரடி.. ஈரானுக்கு அமெரிக்கா வைத்த ட்விஸ்ட்.. பதற்றத்தில் மத்திய கிழக்கு..!!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை விட அவர்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்வதையே தாம் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். “நான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை, ஒரு ஒப்பந்தத்தை எட்டவே விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்ட அவர், வெனிசுலாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் போலவே ஈரானின் பலத்தை அமெரிக்க ராணுவம் வெகுவாகப் பலவீனப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.
அமெரிக்க அதிபரின் இந்தக் கூற்றை ஈரான் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் எந்தவித நேரடிப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும், ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது தொடர்பாக ஓமன் நாட்டுடன் மட்டுமே பேச்சுவார்த்தை இறுதிச் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கிடையே ஈரானின் புரட்சிகர காவல் படையின் தலைமைத் தளபதி அஹ்மத் வஹிதி பேசுகையில், “அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களின் அணுஆயுதங்களைக் கைவிட்டால் மட்டுமே ஈரானும் அணுஆயுதத் தயாரிப்பைக் கைவிடும். அதுவரை நாட்டின் பாதுகாப்பிற்கான பணிகள் தொடரும்” என நிபந்தனை விதித்துள்ளார்.
இந்த ராஜதந்திரப் போருக்கு நடுவே, உலகின் முக்கிய எரிபொருள் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஓமன் கடற்பகுதி அருகே சென்று கொண்டிருந்த ஒரு எண்ணெய்க் கப்பலின் அருகில் இரண்டு சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாகக் கப்பலுக்கோ அல்லது அதில் இருந்த பணியாளர்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, சர்வதேச அளவில் வர்த்தக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
